25/08/2019

மகுடேசுவரன்

வழியோர பெரு விருட்சங்களை வெட்டுக..
பாளம் பாளமாக அறுத்தெறிக..

அந்த மரம் அசோகரால்
நடப்பட்டதாக இருக்கலாம்..

அம்மரத்து விதையை இராஜேந்திரசோழன் ஊன்றியிருக்கலாம்..

கிருஷ்ணதேவராயரின் படைகள் அதன் நிழலில் போர்க்களைப்பாறியிருக்கலாம்..

சினத்தில் மதுரையை எரித்தவள் சேரநாடு செல்லும் வழியில் மரத்தடியில் ஒரு பாட்டம் அழுது தேம்பி இருக்கலாம்..

புத்தர் போதிசத்துவரில் ஒருவர் அங்கு உபதேசம் ஆற்றியிருக்கலாம்..

இரு வேறு குலத்தவர் அடிமர நிழலில் சந்தித்துப் பழகி இருக்கலாம்..

மானஸ்தர் அநேகர்
கிளை தொங்கி
உயிர் துறந்திருக்கலாம்..

ஆயிரக்கணக்கான வழிப்போக்கர் அம்மரநிழலில் நனைந்திருக்கலாம்..

அது வெளியிடும் உயிர் காற்றில் ஒரு ஊரே சுவாசிக்கலாம்..

அம்மரம்
நமது பாரம்பரியமாக
நமது உயிரோடு இருக்கும் வரலாறாக
உற்ற தோழனாக
உயிர் நிலையாக
இருந்திருக்கலாம்..

அதனாலென்ன
இவையாவும்
உமக்கு முக்கியமா என்ன..

வெட்டுக..
வீழ்த்துக..

மகுடேஸ்வரன்...