இரு வழிகள்; நாம் எந்த வழி?
இரு வழிகள்; நாம் எந்த வழி?
குலனின் அமரத்துவமான கவிதை வரிகளில் இது ஒன்று: “இருப்பதற்கென்றுதான் வருகிறோம்; இல்லாமல் போகிறோம்.”
விக்கிரமாதித்யன் எழுதிய ஒரு கவிதையும் அடிக்கடி முன் நின்று கேள்வி கேட்கும்:
“எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும்;
எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்;
எத்தனை மணி நேரம் வாழ வேண்டும்?”
நமக்கு இரு வழிகள் உள்ளன.
ஒன்று,
எல்லா அநியாயங்களையும் பார்த்துப் புழுங்கிப் புழுங்கி, நம்மை மட்டும் விடுவித்துக்கொள்ளும் போராட்டத்தில் பிழைப்பது.
மற்றொன்று,
எதிர்க் கேள்வியோடு களத்தில் இறங்கி ஒட்டுமொத்த சமூக மாற்றதுக்கான போராட்டத்தில் வாழ்வது.
இன்றைக்கு அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கு நாம் முதல் வழியைத் தேர்ந்தெடுத்ததே காரணம்.
இன்றைக்கு அரசு மருத்துவமனைகளின் வீழ்ச்சிக்கு நாம் முதல் வழியைத் தேர்ந்தெடுத்ததே காரணம்.
இன்றைக்குப் பொதுப்போக்குவரத்தின் வீழ்ச்சிக்கு நாம் முதல் வழியைத் தேர்ந்தெடுத்ததே காரணம்.
இன்றைக்குப் பிழைப்புக்காக உயிரைக் கொடுக்கும் நிலையில் நிற்க நாம் முதல் வழியைத் தேர்ந்தெடுத்ததே காரணம்.
ஓர் ஊர் மரங்களை இழக்கும்போது அதற்கு எதிராகப் போராடிச் சூழலை மாற்றலாம் அல்லது புழுக்கத்தை நாம் மட்டும் எதிர்கொள்ள மின்விசிறி போட்டுக்கொள்ளலாம்.
ஓர் ஊரின் நிலத்தடிநீர் நச்சுநீராகும்போது அதற்கு எதிராகப் போராடிச் சூழலை மாற்றலாம் அல்லது தாகம் தீர்த்துக்கொள்ள நாம் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வாங்கிக்கொள்ளலாம்.
ஒரு ஊரின் காற்றே நஞ்சாகும்போதுகூட நாம் நம் அறையில் மட்டும் காற்றுச் சுத்திகரிப்பான்களை வாங்கி வைத்துச் சமாளித்துவிடலாம் என்று நினைப்பது அபத்தம்!
- சமஸ்,