உன்
நினைவுகள்
இல்லா
மனம்
வேண்டும்
வாழ்வதற்கு....
_வெற்றி.
30/06/2019
வண்ணதாசன்
ஒரு பறவை இதைவிட
எடையுள்ளதாக இருக்கும்’
கை நினைத்தது.
‘ஒரு கை இதை விட
மென்மையாக இருக்கும்’
பறவை நினைத்தது.
எல்லாம்
அமர்ந்து பறந்த
சிறுகணத்துக்குள்.
- வண்ணதாசன்
சுந்தர ராமசாமி
'கொஞ்சமாகத் தெரிந்துகொண்டிருக்கும்போது தெரிந்து கொண்டுவிட்டோம் என்றும், அதிமாகத் தெரிந்துகொள்ள முற்படும்போது தெரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணமும் ஏற்படுகிறது. ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரக் கோட்டை இது. அவற்றையும் திறக்கும்போது மேலும் பல கதவுகள் மூடிக்கிடப்பதை பார்க்கிறோம். அப்படியானால் இதற்கு முடிவு என்ன ? திறப்பதே திறக்காத கதவுகளை பார்க்கத்தானா ? பெரிய சவால்தான் இது'.
-சுந்தரராமசாமி
ஜே.ஜே. சில குறிப்புகள்
ஜப்பானிய கவிதை
வேண்டாத எண்ணங்கள் மனதில் அடையாத வரை
எல்லா காலமும் சிறப்பானதே
எல்லா மனிதர்களும் மகிழ்ச்சியானவர்களே.!
-ஜப்பானிய கவிதை
ப.பி
நாம ஒருதவங்க மேல வெச்சிருக்க அன்ப எடுத்து சொல்லி புரிய வெக்குற நிலைமை மட்டும் வரவே கூடாது,
மாறா அவங்கள விலகுறது தான் நல்லது....
நா.முத்துக்குமார்
பரட்டைத் தலையுடன் இலந்தை மரம்
முடி வெட்டுகின்றன
ஆடுகள்!
# பிரபலமானவர்களின் வீடு
வரவேற்பறையில் பரிசுக் கடிகாரங்கள்
எதுவும் ஓடவில்லை!
# காலியான தைல புட்டி
நிரம்பியிருக்கிறது
வாசனையால்!
# காற்று பறித்து போட்டது
தரையெல்லாம் நட்சத்திரங்கள்
வேப்பம் பூக்கள்!
# யாரும் கவனிக்காததை
உணர்ந்த சிறுவன்
அழுகையை நிறுத்துகிறான்!
# இறந்த பாட்டியின் மருந்து புட்டியில்
மண்ணெண்ணெய் விளக்கு
ஞாபகங்கள் எரிகின்றன!
# பறவைகள் முகம் பார்க்க
கண்ணாடியின்று திரும்பின
வறண்டு போனது நதி!
# கடலுக்குள் தொடங்கி
குடலுக்குள் முடித்தது
வாழ்க்கையை மீன்!
# குழந்தைகள் நிறைந்த வீடு
சத்தமாக ஒலியெழுப்புகிறது
ஐஸ் வண்டி!
-நா.முத்துக்குமாரின் குழந்தைகள் நிறைந்த வீடு புத்தகத்திலிருந்து..
சுந்தர ராமசாமி
புள்ளிவிபரங்கள் வரத் தொடங்கியிருந்தன.இனி விழுக்காடுகள் பின் தொடரும். ஒருபோதும் சோதனை செய்யப்படாத வலுவை ஆசிர்வாதமாகக் கொண்டவை
-சுந்தர ராமசாமி
ழான் போத்ரியா
இனி உண்மை என்று ஒன்று கிடையாது. எல்லோரும் சேர்ந்து கட்டமைப்பதுதான் உண்மை.
-ழான் போத்ரியா
ஹென்றி டேவிட் தோரோ
வானம் எப்பொழுதும் நம் விதவிதமான மனநிலைகளுக்கு பதில் கூற தயாராகவே இருக்கிறது. .
-ஹென்றி டேவிட் தோரோ
கட்டளை ஜெயா
பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையிலே
வாசம் உண்டு
உன் தலைமுடி ஒன்று விழுந்த
சாம்பார்
எத்தனை வாசமாய இருக்கிறது
பார்.
-கட்டளை ஜெயா
கவிஜி
அது தன் மகன் இல்லை என்ற பின், பார்த்தவளுக்கு அழுகை நின்றது, பார்க்க போகிறவளுக்கு ஆரம்பித்தது
-கவிஜி
21/06/2019
18/06/2019
நடிகர் சிவகுமார்
தன்னை யாரென்று கண்டறிந்து கொடுப்பதற்கு ஒவ்வொருவருக்கும் யாராவது தேவைப்படுகிறார்கள். ஒரு கடவுளைப்போல அவர்கள் பிரசன்னமாகி, ஏதோ ஒருவிதத்தில் நமக்கு நம் பாதையை அறிவுறுத்தி விடுவார்கள்.அது பாராட்டாகவும், அவமானமாகவும், அலட்சியமாகவும் இருக்கலாம்.அத்தகைய வழிகாட்டிகளை சீக்கிரம் கண்டடைந்தவர்கள் நிஜமான பாக்கியசாலிகள்
-நடிகர் சிவகுமார்
ஶ்ரீவள்ளி
🦚
------------------------------------
பாதையாக இருத்தல்
------------------------------------
(ஸ்ரீவள்ளி)
எந்தப் பாதையாவது
வழிப்போக்கனிடம் அடம்பிடிக்கிறதா
உன்னோடு கூடவருவேன் என்று
எந்தப் பாதையாவது
வழிப்போக்கன் கடந்துவிட்டபோது
வருந்தித் தன்னை
மூடித்தான் கொள்கிறதா
எந்தப் பாதையாவது
வழிப்போக்கனின் பையில்
தன் பூமர நிழல்களை
அள்ளித் திணிக்கிறதா
அல்லது அவனிடம்
தன் நீள அகலத்தின்
தர்மத்தைத்தான்
பறைசாற்றுகிறதா
காதலில் பாதையாக இரு
ஓவியர் ஆதிமூலம்
அங்கீகாரம் கிடைக்கிறதா,இல்லையா என்பததெல்லாம் வேறு.நாமே முதலில் நம் திறமையை எந்த அளவுக்கு உணருகிறோம் என்பதே முக்கியம்
-ஓவியர் ஆதிமூலம்
தஸ்தயேவ்ஸ்கி
எவ்வளவோ இழப்புகள்.. இருந்தாலும் நான் வாழ்க்கையை அழுத்தமாக நேசிக்கிறேன். வாழ்க்கையை வாழ்க்கைக்காக மட்டுமே நேசிக்கிறேன்.
~ தஸ்தயேவ்ஸ்கி
வைரமுத்து
உடம்பு செத்துப்போனா மண்ணுக்குள்ள பொதைக்கிறோம்.மனசு செத்துப்போனா அவன் அத உடம்புக்குள்ளயே பொதச்சிர்றான்
-வைரமுத்து
யாத்திரி
சரி உன் இஷ்டம்; என்று பெண் சொல்லிய பிறகு அதை செய்வதற்கு சிறுதயக்கம் வருகிறதல்லவா! அங்குதான் வென்றுவிடுகிறாள்.
-யாத்திரி
கருப்பையா
அப்படிதான் நிகழ்ந்தது. யுகங்கள் காத்திருந்த நம் இருவரின் முதல் சந்திப்பு மிக எதேச்சையாய்
-கருப்பையா
கோபலகிருஷ்ண காந்தி
ஒருவர் மீதான நம் மரியாதை வழிபாடாகிவிடக் கூடாது "
-கோபாலகிருஷ்ண காந்தி
#LIT FOR LIFE
ப.சிங்காரம்
பண்டைநாள் பெருமை பேசி மகிழும் இனத்தாரிடம் நிகழ்கால சிறுமைகள் மிகுந்திருக்கும்.
- ப.சிங்காரம் (புயலிலே ஒரு தோணி)
- Tharunyan Ravi
வைரமுத்து
குடலில் ஒரு அவுன்ஸ் மலமும் மூளையில் ஒரு அவுன்ஸ் அவமானமும் மிச்சமில்லா மனிதன் எவனுமில்லை !
வைரமுத்து!
மல்லிகா ராம்
கை வளையல்களில்
புதுவித டிசைன்களை
தேடினாள்!
பல மணித்துளிகளாய்..!
–
நெற்றிப்பொட்டு
பளிச்சென இருக்க
அலசினாள்
சில நாழிகைகளாய்!
–
காதணியும் கழுத்தணியும்
அணிந்து பார்த்து
வாங்கினாள்
அரை நாட்களாய்!
–
புது ரக சேலையை
தேர்வு செய்ய
கடைகளில்
தேடினாள், நாள் முழுக்க..
–
காலம் பூரா
வாழப்போகும்
ஆண் மகனை மட்டும்
பார்த்த நொடியில்
தேர்ந்தெடுத்தாள்
காதல் என்ற பெயரில்!
–
————————-
மல்லிகா ராம்
இசை
தெய்வதம்
சிவராசண்ணனை லாரி தூக்கி வீசி விட்டது.
" ப்ரே பண்ணிக்குங்க அங்கிள்..."
போனில் அழுகிறாள் அவர் மகள்.
அப்போதுதான் உறைத்தது
எனக்கு
மண்டியிட ஒரு தெய்வமில்லை என்பது.
ஆனாலும்
மண்டியிட்டே ஆக வேண்டும்
அறுவை சிகிச்சை நிபுணர்களும்
அதையே சொல்கிறார்கள்.
சிவராசண்ணன்
நாளிரண்டு முறைகள்
ஓய்வாக நின்று, ஆனந்தமாக புகைபிடிப்பாரே
அந்த மே ஃப்ளவர் மரத்தடிக்கு ஓடினேன்.
அதன் முன் மண்டியிட்டேன்.
(இசை)
சார்லஸ்வர்ட்ஸ்வர்த்
தன் தந்தை சொன்னது சரிதான் என்று ஒரு மகன் உணரும் பொழுது அவன் சொல்வதுதவறு என்று உணரும் வயதுப்பிள்ளைஅவனுக்கு இருக்கிறான்–சார்ல்ஸ் வர்ட்ஸ்வர்த்"
சுஜாதா
உலகில் நீங்கள் அதிகம் கவலைப்படும் விஷயம் எது? சந்தோஷப்படும் விஷயம் எது?
நம் குழந்தைகள் சீக்கிரமாக இழக்கும் அறியாமை, நம் குழந்தைகள் சீக்கிரமாகப் பெறும் திறமை!
-சுஜாதா
சுபவீ
தேவைக்கு பொருள் வாங்குவதற்கும் ஆசைக்கு பொருள் வாங்குவதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது.
ஏனென்றால் தேவைகளை நிரப்ப முடியும்.ஆசைகளை நிரப்ப முடியாது
-சுபவீ
10/06/2019
வண்ணதாசன்
பறவை என்னைப்
பார்த்துகொண்டு இருந்ததா
தெரியாது.
நான் பறவையைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவ்வளவுதான்.
- வண்ணதாசன்
09/06/2019
மனுஷ்ய புத்திரன்
எப்போதும்
யாராவது இருக்கிறார்கள்
எல்லா இடத்திலும்
யாராவது இருக்கிறார்கள் எப்போது உறங்கினாலும்
யாராவது இருக்கிறார்கள்
எப்போது விழித்தாலும்
யாராவது இருக்கிறார்கள்
நான்
யாராக இருக்கிறேன் என்பது
எனக்கு மறந்து விட்டது
நான் யாராக இருந்தேன்
என்பது எனக்கு மறந்து விட்டது
எங்கும் யாராவது இருக்கிறார்கள்
உற்றுப் பார்த்தபடி
உற்று கேட்டபடி
தனி அறைகளில் பொதுவிடங்களில்..
என் உடலின் பாகங்களை விட கனக்கின்றன
என் மேல் விழும் நிழலின் பாரங்கள்
யாருமே இல்லாத போது பயப்படுவதை விட
அதிகம் அஞ்சுகிறேன்
எப்போதும் யாராவது இருக்கும் இடங்களில்..
நான் என்னைப் பற்றி சிந்திப்பதில்லை
என் வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பதில்லை
என் ஆசாபாசங்களையும் கனவுகளையும் சிந்திப்பதில்லை
அருகில் யார் இருக்கிறார்களோ
அவர்களே சிந்திக்கிறேன்
அவர்களுக்கு இணக்கமாகி கொள்கிறேன்
அவர்கள் ஜோக்குகளுக்கு சிரிக்கிறேன்
அவர்களின் அபத்தங்களுக்கு தலையாட்டுகிறேன்
எல்லாவற்றையும்
அன்பென்றும்
நட்பென்றும்
சகவாழ்வு என்றும்
சமாதானப்படுத்திக் கொள்கிறேன்..
ஒரு நாளில் ஒரே ஒருமுறை
நான் கேட்பதெல்லாம்
நான் ஆடை மாற்றிக் கொள்கிறேன்
அல்லது
கொஞ்சம் கண்ணீர் சிந்திக் கொள்கிறேன்
சற்றே வெளியே இருக்கிறீர்களா?..
மனுஸ்யபுத்திரன்...
தஞ்சை ப்ரகாஷ்
ஒவ்வொரு மனிதனும் தனக்குள் ஒரு உலகத்தை வைத்திருக்கிறான். ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் ஒரு இருட்டை ஒளித்து வைத்திருக்கிறாள்.
- தஞ்சை ப்ரகாஷ்
தஸ்தயேவ்ஸ்கி
ஒரு குழந்தையால் மட்டுமே காரணமின்றி புன்னகைக்க முடிகிறது.
ஒரு குழந்தையால் மட்டுமே உயிரோடு இருக்கும் நிகழ்வை, ஆனந்தமாக குதூகலமாக கொண்டாட முடிகிறது.
அதுதான் வாழ்க்கையின் அடிப்படைத் தன்மை. நம் வாழ்வில் ஒரு குழந்தை நுழையும் போது கற்றுக் கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதென எண்ணுவது துயரமானது.
உண்மையில் நாம் கற்கத் தவறிவிட்ட வாழ்க்கையை கற்றுக் கொள்வதற்காக திரும்பவும் கிடைத்த வாய்ப்பு அது.
-தஸ்தயேவ்ஸ்கி
இளம்பரிதி
*
யாராச்சும் பசிக்குதுன்னு சொன்னா அவங்க பசிக்கு தான் நீங்க சாப்பாடு போட்ணுமே தவிர உங்க கிட்ட சோறு நிறைய இருக்குன்னு அள்ளிக் கொட்டிடக் கூடாது. தட்டும் தாங்காது, வயிறும் தாங்காது.
அதே மாதிரி தான் அன்பும்.
.
இளம்பரிதி
ரவி சுப்பிரமணியன்
கெளவை
--------------
ஒரு செய்தி
சொல்
செயல்
வருகை
பெயர்
படம்
காணொளி
மறதி
அழைப்பு
அவதூறு
ஏதோ ஒன்று
போதுமாயிருக்கிறது
சில நாட்களுக்கு
கசப்பேற்றிக் கலக்கமூட்ட
நீறான சாம்பலாய்
நினைவெங்கிலும்
படிந்துகொண்டேயிருக்கிறது
வேறொரு நல் முகூர்த்தம் வந்து அதை
முழுதும் துடைத்தெடுக்கும் வரை.
(Ravi Subramanyan)
கலை இலக்கியா
சிறகு என்கிறேன் நான்.
இறகு என்கிறாய் நீ
வீழ்தலும்,பறத்தலும் மயங்கிய
பறவையென
பெண்!
-கலை இலக்கியா
நா.பார்த்தசாரதி
புத்தியே இல்லாதவனை கூட நம்பலாம். புத்தியை அவ்வப்போது இடம் மாற்றி அடகு வைக்கிறவனை நம்பவே கூடாது
-நா.பார்த்தசாரதி
மது
எழுதலாம் என்று நினைக்கும் போது
ஏன் என்று தோன்றுகிறது.
எழுதலாம் என்று நினைக்கும் போது
நாளைய அலுவலகம் நினைவுக்கு வந்து விடுகிறது
எழுதலாம் என்று நினைக்கும் போது
முந்தைய நிராகரிப்பு ஞாபகம் வருகிறது.
எழுதலாம் என்று நினைக்கும் போது
மின் இணைப்பு போய் விடுகிறது
எழுதலாம் என்று நினைக்கும் போது
வெங்காயம் நறுக்க அழைத்து விடுகிறார்கள்..
(Madhu)
03/06/2019
ச.மாடசாமி
"சின்னச் சின்ன வெளிச்சத்தையும் பார்க்கிற கண்கள் உங்களுடையது
அது எழுப்பும் மெல்லிய சத்தத்தை கேட்கிற காதுகள் உங்களுடையது.
அது அணைந்து விடாமல் பாதுகாக்கும் கைகளும் உங்களுடையது.
(ஆசிரியர்கள்)
-ச.மாடசாமி
02/06/2019
காதலிசம்
உன் ஞாபகம் என்னிடம் அழியாமல் இருக்கிறது,,,
உன் ஞாபகத்துடன் நான் மட்டும் அழிந்து கொண்டிருக்கிறேன்.
#காதலிசம்.
தென்கச்சி. கோ.சுவாமிநாதன்
மனசை எந்தெந்த விசயங்களிலிருந்து தள்ளி வைக்கிறோமோ...
அந்தந்த விசயங்களிலிருந்து நமக்கு தொல்லை இல்லை.
_தென்கச்சி.கோ.சுவாமிநாதன்.
மனுஷ்ய புத்திரன்
சாத்தியமாகும் அன்பு
நான் உன்னை நேசிக்கிறேன்
நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்
நான் உன்னைப் புரிந்து கொள்கிறேன்
நான் உன்னை சுதந்திரமுள்ளவளாக்குகிறேன்.
நீ இங்கே
இல்லாதபோது மட்டும்.
-மனுஷ்யபுத்திரன்
வனநீலி
ஆம்பள தன்னை எவ்வளவு தான் சண்டியரா காட்டிக்கிட்டாலும்...
சங்கிலிக்கருப்பனா....
சைக்கிள் செயினோட சுத்தினாலும்....
அவனுக்குள்ளயும் ஒரு குழந்தைப்பருவம் இருக்கும்!
ஆத்தா தாலிக்யித்த பிடிச்சிக்கிட்டே பால்குடிச்ச போது.....
பல்லுமுளைச்ச பின்னும் பால்குடியான்னு ,பச்சிலை தடவி பறிக்கப்பட்ட ஏக்கமோ...!
ஆம்பள அழக்கூடாதுன்னு பத்து வயசிலயே பதுக்கி வச்ச சோகமோ...!
அப்படியே ஆழ்மனதில் தூங்கிக்கிடக்கும்.
ஆளாச்சுருவமா ஆனபின்பு.
பொண்ணு கல்யாணம்...
புள்ளபடிப்பு..
பொண்டாட்டி சீக்கு...
வட்டிவாசி ...
வயோதிகம் என ஏதேதோ அழுத்த
அவனுக்கும் ஒரு மடியோ...
மார்போ..
தோளோ...
தேவைப்படும்.
அந்த சமயத்தில ,ஆண்பாலைப் பெண்பாலாக்கி...
என்னம்மா..ஏன்டி?
தங்கம்...
செல்லம்...
அப்பு...
பெத்தாரு...என அவரவர் வயதுக்கு ஏதோ ஒன்றை உதிர்க்க...
அந்தச்சொல்லை..
அந்த நேரம் சொன்னவதான் அவன் கோயில் குலசாமி...
ஆத்தா..
அம்பிகை எல்லாம்!
அந்த உறவ, இந்த ஊரு உலகம் எது என்ன பேருவச்சி அழைச்சாலும்...
வச்சிருக்கான்..
சேத்திக்கிட்டான்...
தோஸ்த்து..
தொடுப்பு..
தோழி...எந்தப்பேரில் யார் குறைகூறினாலும்...
கண்டுக்காம காத்தில மெதப்பான்!
அது ஒரு போதை!.
மோனநிலை.!
அது காமமல்ல...
காதலல்ல...
கலவியல்ல....
களவும் அல்ல.
இறைநிலை!
இத்தகைய பாசமான விளித்தல்களும்
அனுசரனைகளும் பெண்களுக்குமட்டுமே கிடைக்கின்றது!
எந்த வயதானாலும்.
எந்தக்காதலிலும்!
குழந்தையைப்போல் கொஞ்ச வேண்டும் ,
பார்க்கவேண்டும்,
நடத்தவேண்டும் என்பது ஒவ்வொரு ஆணுக்கும் என்றோ ஒரு முறையேனும் ஒருசூழலிலேனும் தோன்றவே தோன்றும்.
அத்தகைய அன்பான அனுசரனையான வார்த்தைகளோ....
அனைப்போ...
தலைகோதலோ...
அவன் வீட்டிலோ...
தோழியரிடமோ...
ஏன் ?
கூடாநட்பில் கூட ஆணுக்கு மறுக்கப்படும் சின்னஞ்சிறு ஏக்கம்.