காலம் அதன்
வெள்ளை இழைகளை லேசாக
தலையில் இழைத்துவிடும்
இவ்வேளையில் தான்
சற்றே மங்கலாய் சில விசயங்கள்
நினைவுக்கு வருகின்றன....
கல்லூரியின்
சிறப்பு பேச்சாளர்
தம் வாழ்க்கையை மாற்றியதாக குறிப்பிட்டாரே
அது என்ன புத்தகம்...
25 வருடங்களுக்கு முன்
அப்படி ஓடிய படமாயிற்றே
அதைப் பார்க்கவில்லையா
என்று கேட்கப்பட்ட திரைப்படம்...
ஒன்றாய் உண்டு உறங்கி
கூடித்திரிந்த நண்பன்
இப்போது எந்த வலைதளத்திலும்
சிக்காது இருக்கிறானே
எங்கே அவன்....
படித்து ரசித்து நெகிழ்ந்து
சற்றே கிழிந்திருந்தாலும்
பரணில் பத்திரமாய் வைத்த கடிதங்கள்
அப்படியே இருக்கின்றனவா....
மேலும் எப்போதாவது
சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால்
கேட்க வேண்டும் உன்னிடமும்
கல்லூரியின் கடைசி நாளன்று
ஏதோ சொல்ல வந்தாயோ?.
_இளங்கோ ஏழுமலை.