24/07/2020

தாருண்யன் ரவி

விவசாயி ஒருவன் உருக்கமாக வேண்டியதற்கு மதிப்பளித்துக் கடவுள் அவன் முன் தோன்றினார்.
“எனக்கு நல்ல மனைவியைக் கொடுத்ததற்கு நன்றி கடவுளே... ஏன் அவளை இவ்வளவு கருணை பொழியும் உள்ளத்தோடு படைத்தாய்?” என்று கேட்டான்.
கடவுள் சொன்னார்: “அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்.”
“ஏன் அவளை இவ்வளவு நல்ல சமையல்கலை நிபுணராகப் படைத்தாய்?”
“அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்.”
கடைசியாக அவன் கேட்டான்: “எல்லாம் சரி கடவுளே... ஆனால் அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய்?”
கடவுள் சொன்னார்:
“அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்.”

-தாருண்யன் ரவி

வேள்பாரி

24.07.2020
*நூல்வழிச்சாலை*

*மைல்கல் - 157* 

வீரயுக நாயகன் வேள்பாரி*-2

எழுதியவர்-
சு. வெங்கடேசன்

*நீங்கள் யார்*?

*கபிலர்*

*அது உங்கள் பெயர்*
*நீங்கள் யார்*?

*நான் புலவன்*

*பாடல்கள் பாடும் பாணரா*?

*இல்லை. நான் கவிதைகள் எழுதும் புலவன்*

*கவிதை என்றால்*?

*ஓவியம் பார்த்திருக்கியா*?

*ஆம்! பார்த்திருக்கிறேன்*

*ஒலியை ஓவியமாக வரைவது கவிதை*

*நன்றி கபிலரே! புரிந்தது*

இப்படி கபிலரோடு நீலன் என்ற குலத்தலைவன் செய்யும் உரையாடலோடு பறம்பு மலையின் ஒரு நுழைவான "வேட்டுவன் பாறை" என்ற இடத்தில் இருந்து நம்மையும் மலை நோக்கி காட்டில் அழைத்துச் செல்வதாக இந்த அற்புதமான வரலாற்றுப் புதினம் தொடங்குகிறது. 

இந்த உரையாடல் போல நாவல் முழுவதும் ஒருவருக்கொருவர் பேசும் மொழி, கருத்துக்கள் தமிழின் சுவையை கூட்டி உணரத்தக்கதாக அமைந்துள்ளது இந்த நாவலின் தனிப்பெரும் சிறப்பு. 

சென்ற பதிவில் கண்டவாறு உண்மைக் கதைக்கு சற்றும் பங்கம் வராதவாறு பல கிளைக்கதைகள், முருகன்-வள்ளி காதல், காடுகளில் பொதிந்துள்ள ரகசியங்கள், வித்தியாசமான விலங்கினங்கள், விதவிதமான பறவைகள், அவற்றின் சிறப்புகளை கதையில் உபயோகப்படுத்திய திறமை, போர் குறித்த வழிமுறைகள், காடுகளில் வசித்த மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் நம்பிக்கை, கொற்றவை வழிபாடு என பல விடயங்கள் நம்மை கனவிலும் துரத்தும் சாகசங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கதையை மீண்டும் ஒருமுறை பதிவு செய்வதை விட சிறப்பம்சங்களை மேற்கோளிட்டு உங்கள் முன் கொண்டு நிறுத்துவது உங்களுக்கு விருந்தாக அமையும் என்பது நமது கருத்து. 
உடனே, புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்ற அவா ஏற்பட வேண்டும் என்பதே நமது விருப்பம்.

*வித்தியாசமான பார்வை*

1. ஐவகை நிலங்களில் இயற்கையோடு இயைந்த வாழ்வு, தேவை மட்டுமே ஆசையாகவும் கனவாகவும் இருந்தது. உழைப்பும் விளைச்சலும் பொதுச்சொத்து.
 எல்லா மனிதனும் சரிநிகர்! ஆண் பெண் இரு பாலின பிரிவு மட்டுமே. கொண்டாட்டமும் குதூகலமும் இயல்பின் பிரதிபலிப்பு. 
வேள்பாரி காலத்தில் வாழ்ந்த ஐவகை நில மக்களின் வாழ்க்கை முறையை இப்படி முறைப்படுத்துகிறார், ஆசிரியர்.

2. மக்களுக்கு பெருஞ்செல்வம் கால்நடைகளே! என்ற வரி உண்மையை உரைக்கிறது!

3. இயல்பு தான் ஒன்றின் குணத்தை தீர்மானிக்கின்றது, எந்த உயிரினத்துக்கும் இது பொருந்துகிறது! - என்பது உளவியல் கோட்பாடாக உணர்த்துகிறது.

4.  *வணிகமே வரலாற்றின் போக்கை தீர்மானிக்கிறது* என்ற வரிகள் உண்மையை உரக்க கூறுகிறது.

5. அறியாமை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். அறிந்தவன் புத்திசாலி ஆகிறான்.

6. ஒரு மனிதனின் முகத்தை மற்றும் சொல்லைக் கண்டு கணிக்க முடியாதது எதுவுமில்லை!
(Face reading ?!)

7. நாடு என்பது அரசும் அரச நியதியும் தான் என்பதை மாற்றி, நாடு என்பது அரசற்ற மக்களின் ஆதி நிலம் என்பதை பாரி நிலை நிறுத்தினான் என்று ஆசிரியர் தன் பார்வையை நிலை நிறுத்துகிறார்.

8. *எது ஒன்றையும் தேவையாக மாற்றுவதுதான் வணிகம்*. *வணிகத்திடம்தான் ஆசையின் திறவுகோல் உள்ளது அதை வெல்லும் ஆற்றல் யாருக்கும் இல்லை*!

9. *ஆறாத் துயரை கலையாக்கும்போது கலைஞன் படும் வேதனைக்கு இணை கூற சொல்லில்லை*! (தங்கள் குல மக்கள் அழிக்கப்பட்ட பின்னணியை பாடலாக்கி *கொற்றவை* விழாவில் குலமகன் ஒருவன் நடத்தும் கூத்தின் பின்புலமாக பதிவிட்ட வரிகள் மேற்கண்டவை!

10. போர் தெய்வம் *கொற்றவையாக* வணங்கப்பட்டது பழந்தமிழர் வாழ்வில்!

11. மூவேந்தர்கள் அழித்த குலங்களின் எண்ணிக்கை16.

12. *வலியையும் வேதனைகளையும் வெளிக்காட்டாமல் வாழ்வது கூட ஒரு விதமான கலை தான்*.

13. பாண்டிய பேரரசின் 10 பெரிய அடையாளங்கள்.
மலை, ஆறு, நாடு, ஊர், யானை, குதிரை, மாலை, முரசு, கொடி, ஆணை.

14. எட்டு வகையான இன்பங்கள் இருப்பதாக ஓரிடத்தில் ஆசிரியர் குறிப்பிடுகிறார் அவை
ஆடை, அணி, உண்டி, தாம்பூலம், நறுமணம், காமம், இசை, கொண்டாட்டம்.

15. *ஆசையின் வழியே பயணப்பட கூடாது*. *அறிதலின் வழிதான் பயணப்பட வேண்டும்*! இயற்கை ஆசைக்கான பொருளன்று!

16. ஆபத்து வரும்போது அதனை எதிர்கொள்ளும் இடத்தில் ஒருவன் இருப்பதுதான், வீரம் அவனுக்கு வழங்கும் வாய்ப்பு! அதனை வெற்றியாக முடிக்கவே ஒவ்வொருவனும் ஆசைப்படுகிறான்.

17. போர் ஒன்று நடக்கும் சமயத்தில் பாரி இயற்கையாக கிடைக்கும் முட்களை கொண்டும், விஷம் மிகுந்த பாம்பையும் கொண்டு ஆயுதம் தயாரிக்கும் ஒரு நிகழ்வு மிக அருமையாக விளக்கப்பட்டிருக்கிறது.
பாரி ஒரு மிகச்சிறந்த மேனேஜ்மென்ட் குரு என கூறும் அளவிற்கான செயல்களை அந்நேரத்தில் செய்வான்.

*முள் ஒடித்து வருவதற்குள் கொம்பேறிமூக்கன் பாம்பை பிடித்து வா என்று ஆணை பிறப்பின் மூலம் இரு குழுவினரையும் துரிதப்படுத்தும் செயல் நிர்வாக பாடமாகும்*
நூலை படிக்கும் போது இந்த நிகழ்வுகள் மிகுந்த விறுவிறுப்புடன் சுவையுடன் அமைக்கப் பெற்றிருக்கும்.

18. *பொறாமையும் வெறுப்பும் எளிதில் அணைந்துவிடும்*. *பகை மட்டுமே மூட்டியவனால் கூட அணைக்க முடியாத பெருநெருப்பு*.

19. வலிமையை விட நுட்பமே ஆற்றல் வாய்ந்தது என்பதை காலம் மீண்டும் மீண்டும் சொல்லித்தருகிறது இன்றளவும்!

20. உயிரினங்களில் அதிக நினைவாற்றலுடன் இருப்பது யானை

21. *விதையை நடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது*. 
மிகச்சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான அறிவுரையாக நான் இதை கருதுகிறேன்.

22. அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் காட்டில் நிலைத்து வாழ முடியாது.

23. *இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்*.

24. *வளைய மறுக்கும் கிளை ஒடிந்து விடும்*. *வளைந்து கொடுக்கும் கிளை நீண்டு தளைப்பதுதான்  இயற்கையின் அமைப்பு*!

25. தேவாங்கு எனும் விலங்கு வேளிர் பழங்குடியினரின் தெய்வ வாக்கு விலங்கு! கொற்றவையின் குழந்தையாக கருதப்படும் முக்கியமான உயிரினம்.

26. இந்த தேவாங்கு எனும் விலங்கு நான்கு திசைகளிலும் மெல்ல நடக்கும். ஆனால் உட்காரும்போது வடதிசை நோக்கி மட்டுமே உட்காரும் என்பது இதன் சிறப்பு. 

27. *வீரமும் வலிமையும் சிந்தனையில் தான் உள்ளது*.

28. யானை தாக்குதலில் 14 வகை இருக்கிறதாம். போரில் இவை பயன்படுத்தப்படுகிறது.

29. போரில் 20 வகை வாள்கள், எட்டு வகை வேல்கள், மூன்று வகை குறுவாள், மூன்று வகைத் தண்டங்கள், மூன்றுவகை கேடயங்கள் சங்ககாலத்தில் உபயோகப்படுத்தப்பட்டன.

30. *புதிய ஒன்று கிடைக்கிறது என்ற மகிழ்வு ஆற்றலை பல மடங்கு பெருக்கும்*.

31. குதிரைகளின் குளம்புகள் லாடம் கட்டுவது என்பது தொன்றுதொட்டு இருந்து வருவது. ஆனால் பாரி தன் காடுகளில் வளர்க்கும் குதிரைகளுக்கு அதன் குழம்புகளில் செம்பு களிமண் பூச்சு பூசி உபயோகப்படுத்தினார். இதனால் குதிரைகளுக்கு எந்த தீங்கும் விளைவிக்காமல் அதேசமயம் குளம்புகளுக்கு மிகுந்த ஆற்றலையும் அளிக்க வல்லது இந்த பூச்சு!

32. பறம்பு மலையின் தனித்துவமான ஆயுதம் மூவிலைவேல்.

33. போரில் ஈடுபடும் ஆண் குதிரை சிறுநீர் வரும்போது அதை கழிக்க உடனே நின்று விடும்! இது போர்க்களத்திலும் கூட நடக்குமாம். 

34. பாரி பெண் குதிரைகளை அதிகம் போரில் உபயோகிப்பார்.

35. *வீசிச் சென்ற வாள் காற்றில் தனது தடத்தை விட்டுவைப்பதில்லை*! அதேபோலத்தான் வீரனின் நினைவுகள் போர்க்களத்தில் தங்கக்கூடாது.

36. எரிந்து மறைதலும் ஒளிர்ந்து அடங்குதலுமே வாழ்வு! இருளை விலக்கத்தான் முடியும், அழிக்க முடியாது.
 ஒளி கண்டு கண்டறியப்படும் உண்மை அதுதான். மரணமும் அப்படித்தான்!

மிகவும் பிடித்த வரிகளை வரிசைப் படுத்தினேன்.

காடுகளின் ரகசியங்களை அடுத்த பதிவில் அறிய முற்படுவோம்.

அன்புடன்
நாகா
24.07.2020

Facebook: Nagachandran

கலீல் ஜிப்ரான்

கண் ஒரு சாதாரண உறுப்பு ஆனால் பார்வையோ
ஒரு மிகப்பெரிய கலை

-கலீல் ஜிப்ரான்

வைதீஸ்வரன்

எறும்பு
கடிக்காத போது
ஏன் கொன்றாய்?

உன்
வேலியற்ற உடம்பில்
விளையாட்டாய் ஊறினால்
உயிர்ப்பலி கேட்குதா….விரல்?

மீறிக் கடித்தாலும்
சாவு உனக்கிலையெனத் தெரிந்தும்
ஊறும் எறும்பை
நசுக்குவதேன் சகிக்காமல்?

சாகும் எறும்பின்
சத்தமற்ற முடிவு
நசுக்கும் மனத்தைக்
குற்றமில்லை என்கிறதா?

உலகத்தில்
நசுக்க மிகச் சுலபம்
எறும்பு தானென்றாலும்
சுலபமாய் இருப்பதால்
கொலையா செய்வது?

-வைத்தீஸ்வரன்

எஸ் ரா

எத்தனை ஆயிரம் வருடங்கள், எத்தனை கோடி மனிதர்கள் கண்ட காட்சி என்றாலும், இன்றும் அலுக்காத அதிசயம் சூரியோதயம்!

எஸ்.ரா

தேவதேவன்

காட்சியளிப்பது மட்டுமே தன் கடமையென
உணர்ந்தார், துயர்குழப்பமிக்க
இவ்வுலகில் தன் கடமை என்னவென்ற
வெகுயோசனைக்குப் 
பின்,கடவுள்"

-தேவதேவன்

ரவி உதயன்

கூண்டுக்கிளிகள்
உங்களிடம்
என்ன பேசிவிடப் போகிறது?
திறந்துவிடுங்கள்
என்பதைத் தவிர்த்து!

-ரவி உதயன்

சிக்மண்ட் ஃபிராய்டு

மனிதன் அவன் நினைப்பதைக் காட்டிலும் அதிக ஒழுக்கமுடையவன். ஆனால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு ஒழுக்கங்கெட்டவன்

-சிக்மண்ட் ஃப்ராய்டு

எஸ் ரா

எந்த மரமும் எவ்வளவு கடுமைான தண்ணீர் பஞ்சத்திலும் தன் இருப்பிடம் விட்டு வேறு ஊர்களுக்கு ஓடிப்போவது இல்லை. தனது வேதனைகளைச் சொல்லிச் சொல்லிப் புலம்புவதில்லை. எல்லா மரங்களும் வாழ்வின் கடினத்தை மௌனமாக எதிர்கொண்டு ஜெயிக்கின்றன. உதிர்ப்பதையும் துளிர்ப்பதையும் ஒன்று போலவே கருதுகின்றன. உயர் தத்துவங்கள் சொல்வதும் இதைத்தானே?

எஸ்.ரா

அ.வெண்ணிலா

துண்டொன்றைக்
கட்டிக்கொண்டு
அம்மாவாக முடிகிறது
குழந்தைகளால்

குழந்தையாக முடியாமல்
தவித்துக் கொண்டிருப்பது
அம்மாக்கள் தான்

-அ.வெண்ணிலா

படித்தது

விழிகளை விட்டு அகன்றால் மனத்தை விட்டு அகன்றுவிடுவோம்.

-படித்தது

சாவி

இந்த நாட்டில் யார் அதிகமாகக் கடன் வாங்கிறார்களோ,
அவர்களுக்குத் தான் மதிப்பு அதிகம்

-சாவி

யுகபாரதி

அதென்ன
அஞ்சலிக் கூட்டம்
ஓங்கிக் குரலெடுத்து
ஒருவர்கூட அழாமல்?

-யுகபாரதி

சதீஸ்பிரபு

அன்பை வெளிக்காட்டத் தெரியாதவர்கள் செல்கிறார்கள்
'கிஃப்ட் சென்டருக்கு"

-சதீஸ்பிரபு

யுகபாரதி

கையேந்தி பவனிலிருந்து
காஸ்ட்லி உணவகம்வரை
நல்லதைத் தீர்மானிப்பது
நாக்குதான்
வாக்கு மாறினாலும்
நாக்கு மாறுவதில்லை
நாக்கை வைத்துத்தான்
நடக்கின்றன
உணவகமும் அரசியலும்

-யுகபாரதி

எஸ் ரா

நாம் எதையெல்லாம் முக்கியம் எனத் தெரியாமல் தூக்கி எறிகிறோமோ, அதையெல்லாம் பின்னாளில் அடைவதற்குப் பெரிய விலை கொடுத்து வருகிறோம் என்பதையே காலம் திரும்பத்திரும்ப நிரூபித்து வருகிறது!

எஸ்.ரா

கதே

அதிகம் உற்று நோக்க வேண்டும்.கொஞ்சமாவது துன்பப்பட வேண்டும். ஏராளமாக வாசிக்க வேண்டும்

-கதே

லா.ச.ரா

மெளனம்.இது பெரும் அழகு. இதன் அழகு கலையாமல் பேணுக.சிந்தனையின் ஓட்டத்தில் தானே படரும் மோனத்துடன் தானே இழையும் தியானத்தின் அடையாளம் கண்டுகொள்ள முடியும். கண்டுகொள்ள பழகிக்கொள்

-லா.ச.ரா

எஸ் ரா

வேகத்திலும் பரபரப்பிலும் நாம் கை தவறவிட்டது நமது சரித்திர பிரக்ஞையை மட்டுமில்லை இயல்பான அன்பையும், அக்கறைகளையும்தான்.

எஸ்.ரா

அ.முத்துலிங்கம்

அவளிடம் எனக்குப் பிடித்தது சிரிப்புதான்.சிரிப்பு என்றால் அது வெளியே வராத சிரிப்பு. எந்நேரமும் சிரிப்பின் தொடக்கம் அவள் உதடுகளில் இருந்து கொண்டே இருக்கும்

-அ.முத்துலிங்கம்

எஸ் ரா

பௌர்ணமி இரவுதானே என்று பின்னிரவில் கடற்கரைக்குப் போய் உலவ முடியாது. வானவில் தெரிகிறதே என்று பெயர் தெரியாத ரயில் நிலையத்தில் இறங்கி நடமாட முடியாது. கோயில்தானே என்று பிரகாரங்களில் படுத்து உறங்க முடியாது. சந்தேகத்தின் நிழல் விழாத இடங்கள் இன்று இந்தியாவில் எங்கும் இல்லை.

எஸ்.ரா

லா.ச.ரா

கேட்காத புத்திமதியை நீயே வழங்காதே.உன்னை நீயே மலிவுபடுத்திக் கொள்ளாதே

-லா.ச.ரா

பழனி பாரதி

கவிஞர் பழனிபாரதி பிறந்தநாள் பகிர்வு
*மணி

*தேடல் இன்பம்...,
தேடுவது துன்பம்..!
# பழனிபாரதி

*முதுமையும் ஒரு குழந்தைதான், தாலாட்ட வேண்டாம்., தள்ளாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
-பழனிபாரதி

*விலைக்கு வாங்கி வந்த கிளி, தமிழ் மொழியை பேசுவது இனிமையாக இருந்தாலும் வருத்தம் தான் தாய்மொழியை மறந்தது...
#பழனிபாரதி

*ஆள் நடமாட்டம் இல்லா இடத்தில்
என்னோடு நீ,
உன்னோடு நான்,
நம்மோடு இளையராஜா
-பழனிபாரதி

*வண்ணத்துப் பூச்சியை விடவும் அழகாய் பறக்கிறது அதன் நிழல்
-பழனிபாரதி

*ஊளையும் குரைப்பும் 
கேட்கின்றன...
உறுமலும் பிளிறலும் 
காணவில்லை
எச்சில் தின்று பழகிவிட்டோம்
கரைதல் போதும் நமக்கெல்லாம்
- பழனிபாரதி

*பூஜையறை

ப்ளாஸ்டிக் மாவிலைத் தோரணங்கள்
ஸ்டிக்கர் கோலங்கள்

டப்பர்வேர் டப்பாவிலிருந்து ஊற்றுகிறார்கள்
விளக்குக்கு எண்ணெய்

ஒலிநாடா ஒப்புவிக்கும்
கந்தர் சஷ்டிக் கவசம்

கடவுள் ஏன் கல்லானான்
கேட்டான் கண்ணதாசன் 
கடவுள் ஏன் பிளாஸ்டிக்கானான்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்

-பழனிபாரதி

*போகிறாய் என்பதையே
மறக்கடித்து விடுகிறது
நீ திரும்பிப் போகிற அழகு
-பழனிபாரதி

*குழந்தைபோல் வளரும்
இந்த இரவுக்கு
ஒரு பெயர் சூட்ட நினைத்து
அதன் காதில்
மூன்றுமுறை சொல்கிறேன்
உன் பெயரை

-பழனிபாரதி

*இருள் என்ன செய்துவிடும்
உடலே விளக்காய் எரியும்  
இந்த மின்மினிகளை...

- பழனிபாரதி

*நாற்காலிகளெல்லாம்
பாடைகளாக
கூட்டணி சேர்கின்றன 
ஊர்வலம் போக
- பழனிபாரதி

*உருகிய தார்ச்சாலையில்
பதிந்து கிடக்கிறது
தலைச்சுமையை தாங்கமுடியாமல்
நடந்த யாரோ ஒருத்தியின் பாதச்சுவடு
-பழனிபாரதி

*குடத்திற்கும் குழந்தைக்கும்
வித்தியாசம் தெரியாமல் சுமக்கிறார்கள்
அம்மாக்கள்
-பழனிபாரதி

*இளைப்பாற வருகிறவர்களின் நிழலில்
இளைப்பாற முடியாமல்
தவிக்கிறது நிழல்
-பழனிபாரதி

தோழமையுடன் மணிகண்டபிரபு

13/07/2020

மார்டின் லூதர் கிங்

'எனக்கு ஒரு கனவு இருக்கிறது. என்னுடைய நான்கு குழந்தைகளும் அவர்களுடைய தோலின் நிறத்தால் மதிப்பிடப்படாமல்,அவர்கள் குணநலன்களால் மதிப்பீடு செய்யப்படும் நாட்டில் ஒருநாள் வாழ்வார்கள்'

-மார்ட்டின் லூதர் கிங்

எஸ்.ரா

நாம் தேடுவது யாவும் விந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறோம் என்றே புரியவில்லை.

எஸ்.ரா

பரமேஸ்வரி

“காலையில் எழுகையிலே
ஆயிரம் கைகள் முளைக்கும்
தோசை சுடுவாள்
துணிமணி துவைப்பாள்
கத்தும் குழந்தையை
தட்டிச் சமாளிப்பாள்
அலுவலகம் கிளம்பும்
மறதிக் கணவருக்கும்
மூளையாய் இருப்பாள்
எல்லாம் முடித்து
அலுப்புடன் அமர்ந்து

டிவி காம்பியருக்கு
பாவமாய் பதில் சொல்வாள் 
"ஹவுஸ் வொய்ப்தான்"

-பரமேஸ்வரி

எஸ்.ரா

வாழ்வின் சரடுகள் எங்கெங்கோ புதைந்து கிடக்கின்றன. நாம் காண்பது அதன் வெளித்தோற்றத்தைத்தான்.

எஸ்.ரா

மீரா

நாளை பெருநாள்..
அறிந்தோ என்னவோ
தங்களுக்காக
அனுதாப ஊர்வலம்
போகும் ஆடுகள்
முன்னதாக ஒருநாள்.

-மீரா

ஷேக்ஸ்பியர்

எந்த மனிதன் தனது ரகசிய ஆசைக்காகத் தன்னை பலிகொடுக்க நினைக்கிறானோ அவன் வீழ்ச்சி அடைந்தே தீருவான்.

-ஷேக்ஸ்பியர்
(மேக்பெத்)

எஸ்.ரா

கற்றுக்கொள்வதற்கு ஆசானை விடவும் மனம் தான் முக்கியமாகத் தேவைப்படுகிறது

-எஸ்.ரா

வண்ணதாசன்

எல்லோரையும் ஏற்றுக் 
கொள்கிறேன்.அவரவர் 
பலங்களோடும் அவரவர் 
பலவீனங்களோடும்

-வண்ணதாசன்

கு.சிவராமன்

ப.சதீஷ் பிரபு

மு.மேத்தா

என்னுடைய சம்பள நாளில்
எண்ணி வாங்குகிற
பளபளக்கும் நோட்டுகளில்
எவரெவர் முகமோ
தெரியும்-
என் முகத்தைத்
தவிர!

-மு.மேத்தா

சு.வெங்குட்டவன்

இழவு வீட்டில்
எதேச்சையாக சந்தித்துக் கொண்ட
நம் கண்களில் ஊற்றெடுத்த துயரம்
செத்துப் போனவருக்கானதல்ல

-சு.வெங்குட்டுவன்

ப.பி

நிஜங்கள் பொய்த்துப் போகும்போது கனவுகள் தற்கொலை செய்து கொள்கின்றன

-படித்தது

ச.மாடசாமி

ஒளிவு மறைவற்றுப் பேசுபவர்களைக் காணுதல் அபூர்வம்.ஒளிவு மறைவற்ற பேச்சுகளைத் தாங்குகிற இதயம் அதைவிட அபூர்வம்

-ச.மாடசாமி

எஸ் ரா

ஒவ்வொரு நகரமும் மற்றவர்களுக்குத் தான் மிக அழகாக இருக்கிறது. அங்கேயே வாழ்பவர்களுக்கு அது ஒரு வாழ்விடம்.

எஸ்.ரா

புதுமைப்பித்தன்

கொள்கை என்பது தூரத்தில் தூக்கிப்பிடித்த தீப்பந்தம் போல் எட்ட இருப்பதாலேயே வெளிச்சம் விழுகிறது.அது எட்ட இருப்பது அவசியம்

-புதுமைப்பித்தன்

எஸ்.ரா

உப்பு சூரியனுக்கும் கடலுக்கும் பிறந்த குழந்தை.

உப்பு சில நேரம் அன்பின் வெளிப்பாடு. சில நேரம் பிறர் காணாமல் துடைக்கும் கண்ணீரின் சுவை.

எஸ்.ரா

லோரிஸ்

குழந்தைகள் பேச நூறு மொழிகள் இருக்கின்றன. குழந்தைகள் கண்டுபிடிக்க நூறு உலகங்கள் இருக்கின்றன.99 மொழிகளை தடைசெய்துவிட்டு ஒரு மொழியை மட்டும் கேட்க வைப்பதும், 99 உலகங்களை மறைத்துவிட்டு ஓருலகை காட்டுவதும் வருத்தத்திற்குரியது

-லோரிஸ்

புதுமைப்பித்தன்

முதலாளியின் மனசைப் பக்குவமடையச் செய்து, பிறகு தினசரி இடைவிடாமல் கேட்டுக்கேட்டு, வழக்கம்போல் இன்றும் கிடைக்காது என்ற மன ஓய்ச்சலுடன் கேட்கும்போது, நிதானத்தைக் குலைக்கும்படியாக  அவர் கொடுத்து விடுவதைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புவதே அவர் வேலைபார்க்கும் ஸ்தாபனத்தின் வன்முறை

-முன்பணம் கேட்கும் தொழிலாளி குறித்து

#புதுமைப்பித்தன்

ராஜன்

மனித மனம் மிக மிகக் கோழையானது. அதன் முனகலை மறுதலிப்பதில் இருக்கிறது மூளையின் வலு."

-ராஜன்

ஈரோடு கதிர்

ரொம்ப பிசியா இருக்கிற ஆஸ்பத்திரில ஒருபொழுது இருந்துபார்த்தா தெரியும், உடல் ஆரோக்கியத்தோட வாழறது எத்தனை பெரிய வரம்னு!"

-ஈரோடு கதிர்

க.சீ.சிவக்குமார்

நிழல்களுக்கு வேறு போக்கிடமில்லை,
வெய்யிலைத்தவிர

-க.சீ.சிவகுமார்

மிர்தாத்

மேலே ஏறுகிற அளவிற்கு இறங்கி வாருங்கள். இல்லாவிடில் சமநிலையை இழக்க நேரிடும்.

-மிர்தாத்

05/07/2020

புத்தர்

இங்கே எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோடி நியாயங்கள் கற்பிக்கப்படும் . ஆனால் தர்மம் ஒன்று தான்.

- புத்தர்

எஸ் ரா

ஒவ்வொரு எழுத்தாளனும் நன்றி தெரிவிக்கவேண்டிய விருட்சம் பனைமரம்.

பனை ஓலையைச் சீவிப் பதப்படுத்தி, எழுத்தாணியால் கீறி எழுதுவது எளிமையானதல்ல. அதற்கு தேர்ந்த பயிற்சியும் வலுவும் தேவை. ஒரு பனை நறுக்கில் அதிகபட்சம் ஆறேழு வரிகள் எழுதலாம். எழுத்தாணி பிடித்துப் பிடித்து விரல் ரேகை அழிந்துவிடும். எனில், சிலப்பதிகாரமும் கம்பராமயாணமும் எழுதிய கைகள் எவ்வளவு தேய்மானம் அடைந்திருக்கும்!

எஸ்.ரா

அலைஸ் வாக்கர்

”தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாகத்தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.”

– அலைஸ் வாக்கர் –ஆப்ரோ - அமெரிக்க எழுத்தாளர்

பழ.புகழேந்தி

கேள்வித்தாளின் பின்புறம்
வரையப்பட்ட ஓவியத்தில்
பூர்த்தியாகி இருந்தது
அவன்
தேர்வு முடித்த
மிச்ச நேரம்

-பழ.புகழேந்தி

ஆ.இரா.வேங்கடாஜலபதி

கள்,காமம்,காதல் இவற்றைவிடவும் போதை தருவது கருத்து. கருத்துக்கள் தரும் போதை அலாதியானது; முடிவற்றது.

-ஆ.இரா.வேங்கடாசலபதி

வண்ணதாசன்

தோன்றியதெல்லாம் நிகழ்ந்தால்தான் வாழ்க்கையின் மீது மரியாதை போய் விடுமே.

-வண்ணதாசன்

ஈரோடு கதிர்

ஆறுதல் மொழியென்பது அழகியதோர் பொய்!

- ஈரோடு கதிர்

கல்யாண்ஜி

முக்கால்வாசிப் பேர்
ஞாபகமாய்
மூடியை கழற்றிய
பேனாவைக் கொடுத்துதான்
கையெழுத்துக் கேட்கிறார்கள்
கவிதைப் புத்தகத்தில்.
இதற்குக் கூட
நம்பாது போன
இவர்களை நம்பியே
இத்தனை வரிகளும்

-கல்யாண்ஜி

ப.பி

ஒருவன் மனதில் முதன்முதலில் சுயநலம் பிறப்பது எப்போது?

"முதல் லாபம் கிடைக்கும்போது"

-படித்தது

கார்த்திக்

1.  ego satisfaction 

தன்னைச்சுற்றி எல்லோரும் காதலிக்கிறார்கள், நான் காதலிக்காமல் இருப்பது எனக்கு இழுக்கு என்று அழுத்தகத்திற்கு உள்ளாகும் ஆண்கள் அதிகம். அவனுக்கு இந்த பெண் என்றில்லாமல் ஏதாவது ஒரு பெண்ணை காதலித்தாக வேண்டும். 
ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்றால் அவள் கண்ணுக்குப் பிடித்த பெண் அவ்வளவுதான். கண்ணுக்குப்பிடித்த பெண்ணை மனதுக்கு பிடிக்கவைக்கும் முயற்சிகளையும் காதல் என்பான்.  கண்ணுக்குப்பிடித்த பெண்ணை பின்தொடர்ந்து அவளை கவரும் முயற்சிகளின் ஆபத்து என்னவென்றால்,  எப்படியாவது அவளுக்கு பிடித்தமானவனாக ஆகிவிடவேண்டுமே என்ற ஏக்கம் ஒரு நிலையில் உருமாறி அவளுக்கு என்னை  பிடிக்காமல் போகவே கூடாது என்று ஆணின் உள்ளுக்குள் ஒரு அகங்காரமாக(ego ) மாறும். 
இது மேலும் தீவிரமடைந்து தன்னுடைய ego satisfactionற்காக அளப்பரிய அன்பையே தரும் நிலைக்கு போகும், அவள் இதுவரைக்கும் கண்டிராத அன்பு. உயிரை கூட பணயம் வைக்கும். இதையெல்லாம் பார்த்து என்னவொரு ஆத்மார்த்த காதலென்று அப்பெண் அவனுடைய காதலை ஏற்றுக்கொண்டதும் அவன் இயல்புக்குத் திரும்பிடுகிறான். அவளைப்பொறுத்தவரை அவன் வேறு ஒரு ஆணாக மாறிவிடுகிறான். 

தன்னை விரட்டி விரட்டி காதலித்தவன், தனக்கு பிடித்தமானவை எல்லாம் தெரிந்து வைத்து நிறைவேற்றியவன் இவன் இல்லையே என்று பெண் குழம்புகிறாள். காதலை ஒரு இலக்காக நிர்ணயித்து பெண்ணிடமிருந்து அதனை அடைந்ததும் அதற்கு பின் என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவனே யோசிக்கிறான் நான் அன்பாகத்தானே இருந்தேன், இப்போது இவள்மீது ஏன் நாட்டமின்றி போகிறது? 
அவன் செலுத்திய அன்பு அவனுடைய  ego satisfactionனுடைய விளைவுதானே தவிர தாமாக விளைந்த உணர்வெழுச்சியின் வெளிப்பாடல்ல. (ego satisfaction love இதைத்தான் காரணமே இல்லாத அன்பு என்று புரிந்து கொண்டிருக்கின்றிர்கள்.) இவ்வுண்மையை அவன்தன் வாழ்நாள் முழுக்கவே உணர்ந்துகொள்ள முடியாது. அவன் ego அதற்கு விடாது. தன்னைக் குற்றம் சொல்லக்கூடிய எந்தவொன்றையும் அது உள்ளிருந்து எதிர்த்துக்கொண்டே இருக்கும். 

பெண்ணின் ego satisfaction வேறு மாதிரி, காதலிக்கப்படுதலை விரும்புபவள் அவள். ஆணின் முக அசைவுகள் வைத்தே அவன் மனதை வாசித்திடும் திறன் அவளுக்கு உண்டு. அம்மாக்கள் பிள்ளைகளின் முகம்பார்த்து நிலை அறிந்து கொள்வது போல அப்பாக்கள் செய்வதில்லை. எதுக்கு அண்ணா டல்லா இருக்கற? என்று தங்கைகள் கண்டுகொள்வது போல தம்பிகளால் முடிவதில்லை. இப்படியிருக்க, பெண்ணோடு பழகும் ஒருவன் அவளைக் காதலிக்கிறான் என்றால் அவளுக்குத் தெரியாமலா இருக்கும்? நிச்சயம் கண்டுபிடித்து விடுவாள். ஆனால் வெளிச்சொல்ல மாட்டாள். ரசிப்பாள். காதல் சொல்லத் தூண்டுவாள். அவனே வந்து காதலைச் சொன்னால் ஏற்றுக்கொள்ளவும் மாட்டாள். அவளுக்கு காதலிக்கப்பட மட்டுமே வேண்டும், ஆணை கவர்கின்ற பெண்ணாக இருக்கிறேன் என்று அவளுக்கு அவளே அவளை நிரூபித்தாக வேண்டும். ego satisfaction.
தன்னை விட புத்திசாலி என்று அவள் நினைக்கின்ற ஆணோடு விரும்பிப் போய் பேசுவாள். அவர்களோடு மிக எளிதில் நட்பாகிவிடுவாள். அவனுக்குள் இருக்கும் மிகச் சாதாரண ஆண் பிம்பத்தை கண்டுகொள்வாள். வெற்றிபெற்றதாகச் சிரித்துக் கொள்வாள். ego satisfaction.

2. love 

இத்தனை சிக்கலான ஆண், இத்தனை சிக்கலான பெண் காதல் கொள்வது அதைவிடச் சிக்கல். 

காதலை ஏதாவது ஒரு வகையில் எக்ஸ்பிரஸ் செய்துகொண்டே இருப்பார்கள். இங்கு அடிக்கொருமுறை காதலிக்கிறேன் காதலிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் காதலை உணர்த்த முடியவில்லை என்றேதான் அர்த்தம். உணர்த்த முடியவில்லை என்றால் காதலும் இல்லை. அங்கிருப்பதெல்லாம் எனக்கொரு தேவை இருக்கிறது அதற்காக நீ வேண்டும். நான் உன்னை முன்பதிவு செய்து வைக்கிறேன் என்னும் ஒப்பந்தம் மட்டுமே. இங்கு தேவை என்பது வெறும் உடல்ரீதியான பார்வை மட்டுமல்ல- என்னோடு பேச, பழக, நேரம்போக்க, என்வெளியில் நான் அறிமுகம் செய்து மகிழ எனக்கொரு எதிர்பாலின இணைவேண்டும் என்பதும் சேர்த்தி. இதுதான் இவர்கள் காதலென்று நினைத்திருக்கும் ஒன்றின் சிக்கல். 

எந்தளவிற்கு உருகி உருகி ஒரு காதல் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படுகிறதோ அதேயளவு அதில் போலித்தனமும் சேர்ந்திருக்கும். 
நான் உனக்காகவே வாழ்கிறேன் உனக்காகவே சாகிறேன், -என்றால் நீயும் எனக்காகவே வாழ்/சாவு 
உன்னைத்தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க மாட்டேன் -என்றால் நீயும் பார்க்கக்கூடாது. 
ஒவ்வொரு காதல் வெளிப்பாட்டிலும் இப்படி மறைமுக கட்டளை ஒளிந்திருக்கும். 
மறைமுக கட்டளைகளுக்குள் நிர்பந்தப்படுத்தப்படுகிறோம் என்பதே பெண்ணுக்கு மிகத் தாமதமாகத்தான் தெரியவரும். 

இந்த உறவில் எங்கு இடறினோம் என்ன பிரச்சினை என்று அவள் உணரும் போது, உன்னை விரும்புகிறேன் விரும்புகிறேன் என்று சொல்லிச் சொல்லியே அவளுக்கான அழகிய கூண்டை ஆண் வடிவமைத்து முடித்திருப்பான்.

பெண்ணை,பெண்ணின் உடலை உரிமை கொண்டாட ஆசைப்படும் மனச் சிறையிலிருந்து விடுபடத் தெரியாமல்  அவளையே கூண்டில் வைத்து விடுகிறான். 
அவள் விடுவிக்கச் சொல்லிக் கோரும் போது, நான் உன் மீது செலுத்தும் அன்பை நீ உனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாய் என்று அவளையே சாடவும் செய்வான்.  இதற்கு பெயர் அன்பல்ல டார்ச்சர் என்று அவளுக்கு தொண்டை கிழிய கத்த வேண்டும் போலிருக்கும். 

அன்பை வழங்கும் போது அதனை சாதகமாகப் பயன்படுத்தும் உரிமையும் சேர்த்தேதான் கொடுக்கப்படுகிறது. சாதக உரிமைக்கு அனுமதி இல்லையென்றால் நீங்கள் செலுத்துவது அன்பல்ல, ஆளுமை!
கிட்டத்தட்ட உனக்கு சுதந்திரம் தருகிறேன் அதனை நீ மிஸ்யூஸ் செய்யக்கூடாது என்பதைப்போல. - சுதந்திரம் என்பதே மிஸ்யூஸ் செய்யத்தான். அதில் சந்தேகமில்லை. அவளுக்கு சுதந்திரம் கொடுக்க நீ யார் என்பது தான் முதல் கேள்வி. இதற்கு விடை தேடினாலே விடியல் கிடைத்திடும். 

நிஜமாய் காதல் என்பது தன்முனைப்புகள் ஏதுமின்றி நிகழ்தல்,
நாம் நேசிப்பவர்கள் மகிழ்ச்சியில் மகிழ்தல்,
அம்மகிழ்ச்சிக்கு நான் மட்டுமே காரணமாக இருந்திடவேண்டும் என்னும் சுயநலத்திலிருந்து விலகுதல்,
அவர்கள் மகிழ்ச்சிக்காக என்னென்ன செய்கின்றார்களோ அவையனைத்தையும் கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ளல், 
அவர்களுக்கு உங்களை பிடிக்கவில்லையா? வேறு ஒருவரை பிடித்திருக்கிறதா? அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியா? 
ஆம் எனில் 
இவ்வளவு நாள் நீ உடனிருந்தது பொய்யா? உன் காதல் போலியா? உன் அன்பு நடிப்பா? நான் எந்த வகையில் குறைந்துபோய்விட்டேன்? என்ற கேள்விகளுக்கு இடம்தராமல், அவர்கள் மகிழ்ச்சியை அவர்கள் தேடிக்கொள்வதற்கு இடையூறாக இல்லாதிருத்தல்.

இவ்வளவு நாள் நீ உடனிருந்தது நிஜம்! 
உன் காதல் நிஜம்!
உன் அன்பு நிஜம்!
இப்போது நீ இல்லாதிருப்பதும் நிஜம்!
நிஜங்களை நிபந்தனையின்றி
ஏற்றுக்கொள்ளப் பழகுதல் காதல்.

-கார்த்திக்

சுஜய் ரகு

அந்தப் பாறையின் மௌனம்
அசாதாரணமானது-காட்டில்
எல்லாம் பேசுகிறபோது

-சுஜய் ரகு-

மீரா

உறவினர் வீட்டுக்
கல்யாணங்களுக்காய்
காத்துக் கிடக்கும் பெட்டியில்;
என் மனைவியின் 
ஏழெட்டுப் பட்டுச்சேலைகள்
-வெட்டியில்...

-மீரா

சாக்ரடீஸ்

நான் இளைஞனாக இருந்தபோது எல்லாம் தெரியும் என நினைத்தேன்.கொஞ்சம் வயதானபோது கொஞ்சம் தான் தெரியும் என உணர்ந்தேன். முதிர்ச்சி அடைந்தபோது தான் தெரிந்தது எனக்கு எதுவும் தெரியாது என்று

-சாக்ரடீஸ்

முகில்

கம்பர் விழாவில் கலந்துகொண்டு பேச எம்.ஆர். ராதாவுக்கு அழைப்பு வந்தது. போனார். பேசினார்.

‘பெரியவங்களே, சின்னவங்களே, பொம்பளைங்களே. நீங்கள்ளாம் இப்ப எதுக்கு வந்திருக்கீங்க அப்படின்னு உங்களுக்குத் தெரியும். இந்த கம்ப நாடாரின் விழாவிலே...’

குறுக்கிடும் ஒருவர் ‘அய்யா, அவரு நாடாரு இல்லை.’

‘நாடார் இல்லையா. நம்மாளு போலருக்கு. இந்த கம்ப முதலியராகப்பட்டவர்...’

‘அய்யா, அவரு முதலியாரும் இல்லை.’

‘முதலியாரும் இல்லையா! சரி என்னன்னு புரிஞ்சு போச்சு. இந்த கம்பர் அய்யர் ஆனவர்...’

‘அய்யா, அவரு அய்யரும் இல்லை.’

‘என்னது நாடார் இல்லை, முதலியார் இல்லை, அய்யரும் இல்லை. அப்ப இப்பதான் சாதியை எல்லாம் சொல்லிக்கிட்டிருக்கோமா? அப்ப ஜாதி கிடையாதா? சரிதான். இந்த சாதியில்லாத கம்பன் விழாவிலே...’

ராதாவின் பேச்சு தொடர்ந்தது.

*முகில்

மோகனரங்கன்

ஒரு நாவல் முதல் பத்தியிலும்,
சிறுகதைகள் முதல் வரியிலும் தொடங்குகின்றன

-மோகனரங்கன்

வெற்றி வேந்தன்

அட்டை போடாத அஞ்சாவது புக்கு என்னைக்கோ கிழிஞ்சுருச்சு ஆறாம் வகுப்புக்கு தேறிட்டன்னு  அறிவிப்பு மட்டும் வந்திருச்சி ... 

பள்ளிக்கூடம் பூட்டு போட்டு 
மாசம் இன்னைக்கு நாலாச்சு..
பிரைவேட்ல படிக்கிறவனுக்கு ஸ்கூல் வீட்டுக்கே வந்தாச்சு.. 

 ஆன்லைன்ல படிக்கிறேன் டா ஆணவமா ஆதி சொன்னான்.. 
எதிர்வீட்டு கோபி சொன்னான்
ரெண்டு ஜிபி தேவைப்படுமாம்.. 

சட்டையில மட்டுமில்ல அப்பா போன்லயும் ரெண்டு பட்டன் இல்லை ..
ஸ்மார்ட் போன் வாங்க காசு இருந்தா ஸ்கூல் பீஸ் கட்டி சேர்த்திருப்பார் .. 

கூலிக்கு மாரடிக்கும் குருவம்மா எங்கம்மா..
கூறுகெட்ட கொரானாவால வீட்டுக்குள்ளே முடங்கிருக்கா..
அப்துல் கலாம் ஆவன்னா  அரசு பள்ளியில சேர்த்துவிட்டா?ஒருவேல சுடுசோறு தின்பான்னு ஆசைப்பட்டா..

 இப்ப சொல்லித் தரவும் ஆளில்லை .. 
சோத்துக்கும் வழியில்ல..
கத்துதந்த வாத்தியாரும் அரிசி போட போய்ட்டாராம்.. 

வறுமை ஒன்னும் புதுசில்ல
வாழ்ந்து பார்த்து பழகிடுச்சு ..
வாய்ப்பு பறி போயிடுமோன்னு தான் வாசல் பார்த்து காத்திருக்கேன்.. 


மாஸ்க் வாங்க காசு இல்ல கர்ச்சீப் தான் கட்டிக்கிறேன். . 
புக்கு மட்டும் குடு சாமி
புரட்டி  கிரட்டி  கத்துக்கறேன்.. 
    
                                  - வெற்றிவேந்தன்
                                     VI std???

எஸ் ரா

பறவைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. எந்தப் பறவையும் தன் தேவைக்கு அதிகமாகச் சேர்த்து வைத்துக் கொள்வது இல்லை. பறவை வாழ்வை ஒவ்வொரு நாளும் புதிதாகச் சந்திக்கிறது.

எஸ்.ரா

எஸ்.ரா

செடியிலிருந்து பறிக்காமல் ஒரு பூவைப் பார்ப்பது நமக்குப் பழக்கப்படவே இல்லை.

எஸ்.ரா

ச.மாடசாமி

குழந்தைகளின் உலகங்கள் உயிர்பெற, தொழில்நுட்பம் மட்டும் போதாது. பாடப்புத்தகங்கள் மட்டும் போதாது. உள்ளமும் உணர்வும் கனிந்த ஒரு வகுப்பறை வேண்டும்.

-ச.மாடசாமி

ஔவையார்

இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே"

 -ஔவையார்

சுஜாதா

நல்ல கவிதை என்பதற்கான வரையறை என்ன?"

 கவிதையில் எழுதாத வரிகள் ( unwriiten lines) வாசகன் தானாக உணரும் வண்ணம் இருக்க வேண்டும்

-சுஜாதா

வண்ணதாசன்

காலிச் சொம்பை நிரம்பின சொம்பு என்று நினைத்துக்கொண்டு எடுக்கும்போது கை ஒரு நொடி ஏமாறுமே, அது போல அந்தச் சிரிப்பு ஏமாற்றியது”

-வண்ணதாசன்

ஆபிரகாம்லிங்கன்

நான் மெதுவாகத்தான் நடப்பேன் ஆனால் ஒருநாளும் பின்னோக்கி நடக்க மாட்டேன் 

-ஆபிரகாம் லிங்கன்

எஸ்.ரா

மழை பெய்து முடித்த பிறகு மண்ணில் இருந்து எழும் வாசத்தை நுகர்ந்திருக்கிறீர்களா? மண் பூக்கும் நேரமிது.

மழை ஒரு தியானத்தைப் போல மெல்ல நம்மை அதற்குள்ளாக அமிழ்ந்து போகச் செய்கிறது.

இரவில் பெய்யும் மழை ஒரு ரகசியம். அது நம் கனவுக்கும் நிஜத்துக்கும் இடையில் பெய்கிறது.

எஸ்.ரா

கலீல் ஜிப்ரான்

யாரேனும் எளிதாகச் சொல்லும்வரை நாம் அறியாமல்போனது எதுவோ, அதன் பெயர் தெளிவு
-கலீல்ஜிப்ரான்

கு.சிவராமன்

மருந்தென வேண்டலாம் யாக்கைக்கு 
அருந்தியது அற்றது போற்றி உணின்.

"முந்தைய சாப்பாடு முழுமையாய் சீரணித்தபிறகு,அடுத்த உணவுக்கு இலையை விரித்தால், மருத்துவமனையில் படுக்கையை விரிக்க வேண்டியதில்லை

-கு.சிவராமன்