30/12/2020

திருமூலர்

அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்

 அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்

   அறிவுற்று அறியாமை எய்தி நிற்போர்க்கே
   அறிவிக்க தம் அறிவார் அறிவோரே

அறிவார்ந்த தத்துவ ஞானங்களை அறிவில்லாதவர்களிடத்தில் தெரியப் படுத்த வேண்டாம்.அறிவுடைய அறிஞர்பெருமக்களுக்கும்  அதை அறிவிக்க வேண்டியது  அவசியம் இல்லை..அறிவு இருந்தும் அறியாமையினால்  தெளிவுக்காக அணுகுபவர்களுக்கு மட்டுமே அறிவிக்கத்  தெரிந்தவர்கள் அறிவுடையவர்கள்

- திருமூலர்.

05/12/2020

வண்ணதாசன்

அந்த நாற்காலியைப் பார்க்கும் போது 
மரத்தை நினைக்காதீர்கள்.
அப்புறம் உங்களால் 
அதில் உட்கார முடியாது.

மரத்தின் கீழ் பழம் பொறுக்கும் போது
நாற்காலியை யோசிக்க வேண்டாம்.

அப்புறம்  உங்களால்
அந்தக் கனியைப் புசிக்க முடியாது.

~ வண்ணதாசன் ~

கலாப்ரியா

" நாவில் 
எச்சில் ஊறவைப்பதில்லை ..
வண்ண மீன்கள் ."

- கலாப்ரியா

ரமேஷ்

நடந்தே வந்துவிட்டேன் கால் வலி இல்லை...,வரும் வழியில் லிப்ட் வேண்டி நீட்டிய கையில் மட்டும் கடுமையான வலி....!!!!

-ரமேஷ்

ஓஷோ

🌹 நான்  சாதாரணமானவன்

கேள்வி : 

 நீங்கள் , "நான் மிகவும் சாதாரணமானவன் ' என்று கூறுகிறீர்களே இதற்கு என்ன அர்த்தம் ? எங்களுக்குச் சற்று விளக்கவும்

பதில் : 

உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற எனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை .

 நான் மிகச் சாதாரண நிலையில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் நானாகவே இருக்கிறேன் . 

உண்மை மிகவும் சாதாரணமானது .

 ரோஜாப்பூ , ரோஜா பூவாகவும் , ஆறு ஆறாகவும் , பாறை பாறையாகவும் இருக்கிறது . 

நான் அவற்றைப் போல ஒரு சாதாரணமானவன் . 

பிறகு உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் ? 

அந்த வித்தியாசம் , நான் என்னுடைய சாதாரணத் தன்மையைக் கொண்டாடுகிறேன் .

 ஆனால் நீங்களோ அதைக் கொண்டாடுவது இல்லை . 

நான் அதில் நிறைவாக இருக்கிறேன் .

 பேரானந்தத்தில் இருக்கிறேன் .

 நான் ஒரு உயிர்த்தன்மையாக இருக்கிறேன் .

 நீங்களோ எதிர்காலத்தில் இருக்கிறீர்கள் 

 என்னிடம் எந்த எதிர்பார்ப்போ , எந்தப் புகாரோ , வேறு யாரையும் போல நான் ஆகவேண்டும் என்று முயன்றதோ இல்லை .

நான் என்னுடைய படைப்பில் நிறைவாக இருக்கிறேன் .

 🌿நான் ஒரு சின்ன விஷயத்தைக்கூட மாற்ற விரும்பியது இல்லை . 💐

இந்தப் பரிபூரண ஓய்வுத்தன்மையில் அந்தத் தெய்வீகக் கொண்டாட்டம் தானே கிளம்புகிறது .

இந்தப் பிரபஞ்ச உயிர்த்தன்மையில் கடவுள் மிகவும் சாதாரணமாக இருக்கிறார் . 

அது அப்படித்தான் இருக்கவேண்டும் .

நீங்கள் வித்தியாசமாகவும் , தனித்தன்மையுடையவராகவும் இருக்கும் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் விட்டுவிடுவது தான் என்னுடைய முழுப் போதனையாகும் .

 உண்மையை அப்படியே அனுபவியுங்கள் .

 நீங்கள் யாராக இருந்தாலும் எங்கே இருந்தாலும் நீங்கள் உங்களையே கொண்டாடுங்கள் .

 இதைத்தான் நான் பிரார்த்தனை என்கிறேன் . 

நீங்கள் எப்படி இருக்க வேண்டுமோ , அப்படி இருப்பதே மிகப்பெரிய அற்புதம் ! .....

கேள்வி : 

 நாங்கள் உங்களோடு எவ்வளவு காலம் இருக்க வேண்டும் ?

பதில் : 

" அது உங்களைப் பொறுத்தது ; என்னைப் பொறுத்தது அல்ல .

 எந்த மாஸ்டரும் , யாரையும் ஞானமடைய வற்புறுத்த முடியாது .

 எந்த மாஸ்டரும் ' என்னோடு இரு ' என்று கட்டளையிட முடியாது .

 ஒரு சீடனின் இதயம்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும் .

அந்த அன்புப் பிணைப்பு சீடனின் இதயத்திலிருந்து வரவேண்டும் .

 இது ஒரு கல்லூரி இல்லை . 

நீங்களும் ஒரு மாணவர் இல்லை .

 என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் முழு சுதந்திரத்தில் இருக்கிறீர்கள் .

இங்கே யாரும் வரவில்லையென்றாலும் , நான் ஒவ்வொரு நாள் மாலையும் இங்கு வந்து இந்த மூங்கிலுக்குப் பிரசங்கம் பண்ணுவேன் ! 

நீங்கள் இங்கு இருப்பதா , வேண்டாமா என்பது உங்களுடையது முடிவு ; என்னுடையது அல்ல . " .......... 🌹

 *ஓஷோ*

மார்க் ட்வைன்

தைரியம் என்பது பயமற்ற தன்மையல்ல, பயம் இருந்தும் துணிச்சல் கொள்வது"!
-மார்க் ட்வைன்

மார்க் ட்வெயின்

உங்களுக்குத் தெரியாத விஷயங்கள் உங்களைப் பிரச்சனைக்கு உள்ளாக்குவதில்லை. உண்மை என்று நீங்கள் நம்புகின்ற விஷயங்களே உங்களுக்குப் பிரச்சனையை உருவாக்குகின்றன

-மார்க் ட்வெயின்

மரியவால்டோர்டா

நன்மையாயிருப்பது எவ்வளவு இனிமையானது.!
பகையில்லாமல் ,பொறாமையில்லாமல் , கர்வமில்லாமல் இருப்பது,
அன்பை மாத்திரம் பார்க்கின்ற கண்களைக் கொண்டிருப்பது எவ்வளவு இனிமையானது.!
அன்பின் செயல்களுக்காக மட்டும் நீட்டப்படுகிற கைகளும் அன்பின் வார்த்தைகளை மட்டுமே பேசும் உதடுகளும் எவ்வளவு இனிமையானவை.!
எல்லாவற்றிக்கும் மேலாக அன்பினால் மட்டும் நிரம்பி, கண்களையும்,கைகளையும்,உதடுகளையும் அன்பின் செயல்களுக்காக மாத்திரம் தூண்டக்கூடிய  இருதயம் எவ்வளவு இனிமையானது.!

-மரியவால்டோர்ட்டா

மனுஷ்ய புத்திரன்

அன்பின் நிமித்தம்
யாரையும் இப்போது நான்
பின் தொடர்ந்து செல்வதில்லை

என்னால்
முன்னைப்போல நடக்க முடியவில்லை
என்பதால் அல்ல

சற்று தொலைவுபோனதும்
அவர்களே ஒரு பனித்துளிபோல
ஆவியாகிவிடுகிறார்கள்

அவர்கள்
அந்தப் புல்லில்
அதற்கு முன் இருக்கவேயில்லை
என்பதுபோல

~ மனுஷ்ய புத்திரன்

டி.டி.ராம் மோகன்

"இரண்டு நாய்கள் ஒன்று சேர்ந்தால் புலி ஆகிவிடுவதில்லை" 

-வங்கி இணைப்பு குறித்து முன்பு ஆமதாபாத் ஐ.ஐ.எம் பேராசிரியர் டி.டி.ராம் மோகன் கூறியது

சு.வெங்குட்டவன்

கொரங்காட்டு இட்டேறி
நெடுஞ்சாலையைத்தாண்டும்
இவ்விடத்தைக் கடக்கும் பொழுதெல்லாம்
நினைவுக்கு வந்துவிடுகிறது
தங்கம் பஸ் சர்வீஸில் அடிபட்டுச்செத்த
வெள்ளாட்டுக்குட்டியின் பொருட்டு
அழுதுபுரண்டு அப்பத்தா கதறியது
கூடவே அப்பத்தா போனநாளில்
எங்களில் யாரும் அவ்விதம்
கதறாததும்

- சு. வெங்குட்டுவன்

ஜெயகாந்தன்

எவ்வளவு அதிக உணர்வுப் பூர்வமானவர்களாக நீங்கள் இருக்கிறீர்களோ அவ்வளவு கடுமையான குற்ற உணர்வு உங்களிடம் இருக்கும். 

மேலும் நீங்கள் அதிகமாக 
பொறுப்புணர்வு கொண்டால் அதிக குற்ற உணர்வுடன் இருப்பீர்கள்..!

-ஜெயகாந்தன்

மிதார்த்

💥"எந்த வாளாலும் காயப்படுத்தமுடியாத காற்றைப்போல் திகழுங்கள்"

-மிதார்த்
- தமிழில் கவிஞர் புவியரசு.

ராஜா சந்திரசேகர்

தாண்டிக் கொண்டேயிரு
தாண்டிக் கொண்டேயிரு
உயரங்களையும்
கூடவே உன்னையும்

-ராஜா சந்திரசேகர்

அண்டன்பிரகாஷ்

மூளையில் சுரக்கும் மெலட்டோனின் எனும் ஹார்மோன் தான் நம்மை தூங்குவதற்கு உந்துகிறது.
கண்களால் கிரகிக்கும் ஒளியை லக்ஸ் எனும் யூனிட்டால் அளக்கிறார்கள்.
மெழுகுதிரி 3லக்ஸ், இரவு பல்பு 100லக்ஸ்.இது அதிகமாகும் போது மெலட்டோனின் சுரப்பு குறையும்.

9000.லக்ஸ் உள்ள வெளிச்சத்தைக் கண்கள் பார்த்தால் அந்த இரவில் சுரக்காமலே போகும். கண்கள் வழியே திரையிலிருந்து வரும் நீல வெளிச்சத்தால் இயலாது.

நீண்டநேரம் டி.வி,செல்போன் பார்த்தால் மெலட்டோனின் சுரக்காமல் தூக்க சுழற்சி பாதிக்கும்

-அண்டன் பிரகாஷ்