27/10/2020

மீரா

இலக்கிய கூட்டம்
பரவசமூட்டும்
பக்திக் கூட்டம்
எந்தக் கூட்டம் என்றாலும்
வைர மூக்குத்தி கடுக்கன் சகிதம்
முன்னால் இருப்பாள்
"காது மட்டும் கேட்காது"

-மீரா

சுபி நாகராஜன்

சுண்டுவிரல் பிடித்து
நடைபழகும் குழந்தையின்
வினோத கேள்வியொன்றிற்கு
விடைதேடும் தகப்பனைப்போல
உன் உதட்டுச் சுழிப்பிற்கு
அர்த்தம் தேடுகிறேன்.
_சுபிநாகராஜன்..

புதன்

பாதம் படுவதற்ககாவே
பதிந்திருக்கிறது உன் வீட்டு படியில் பனித்துளி
கொஞ்சம் பார்த்துச்செல்.
பாத உஷ்ணத்தில் கரைந்து விடப்போகிறது.
உனக்காக காத்திருக்கும்
ஒன்றை சிதைக்க வேண்டாம்
என்னை செய்தது போல்...
_புதன்...

கவிஜி

விடிய விடிய தரிசனம் தந்த
சாமி தூங்கிவிட்டது
திரும்பி வருகையில் விபத்து

-கவிஜி

மணிகண்டபிரபு

காட்டுப்பன்றி ஒன்று தன் கொம்புகளைத் தீட்டிக் கொண்டிருந்தது.அதைப் பார்த்த நரி நீ ஏன் கொம்புகளைத் தீட்டுகிறாய்?

அதற்கு பன்றி எதிரி நம் முன் திடீரென வந்துவிட்டால் எப்படித் தீட்ட முடியும் என்றது

"யுத்த காலத்தில் செய்ய வேண்டியதை சமாதான காலத்தில் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்"!

கவிஜி

மணமேடையில் மடியூறும் எறும்பை 
தட்டி விடாதே 
வாழ்த்தரிசி ஒன்றை கவ்விக் கொண்டு 
நகர்ந்து விடும் 

-கவிஜி

மகுடேசுவரன்

பழங்காலத்தில் 
சொல்லத் தெரியாதவன் பாமரன்.

பிற்காலத்தில் 
படிக்கத் தெரியாதவன் பாமரன்.

முற்காலத்தில் 
தாய்மொழி தெரிந்திருந்தாலும் 
ஆங்கிலம் தெரியாதவன் பாமரன்.

தற்காலத்தில் 
ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் 
கணினி தெரியாதவன் பாமரன்.

காலம் 
புதுப்புதுப் பாமரர்களை 
உருவாக்கிக்கொண்டே இருக்கிறது !

நம்மைப் பாமரனாக்கும் உலகைத்தான் 
நாமும் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் !

 

-மகுடேசுவரன்

ஆபிரஹாம் லிங்கன்

தவறுகள் செய்யபடி சூழல் தூண்டும்போது, வடக்கேயும் தெற்கேயும் பார்க்காதீர்கள். மேலேயும் கீழேயும் பார்க்காதீர்கள்.உங்கள் உள்ளுக்குள் பாருங்கள்.அங்கே ஒரு தராசு இருக்கிறது.அதன் பெயர் மனசாட்சி

-ஆபிரகாம் லிங்கன்

யாத்திரி

ஊர்த்திருவிழாவிற்கு
அக்காள் வந்திருந்தாள்
பிள்ளைகளுக்கு விடுமுறை கிடைக்கவில்லை
என்று வருந்தினாள்,
அவள் ஊர்திரும்பும் போது
நினைவாக
நான்கு பலூன்கள் வாங்கித்தந்து
"பிள்ளைகளிடம் சென்று கொடு” என்றேன்.

அக்கா சிரித்துக்கொண்டாள்,
"உன் மருமகப்பிள்ளைக என்ன இன்னும்
விரல் சூப்பிட்டு இருக்குன்னா நெனைச்ச,
குத்தவைக்கப் போற வயசு வந்துட்டுடா அவளுக்கு "..

எனக்குத் தெரியவில்லை
வளர்ந்த பெண்ணுக்கு
திருவிழாவில்
என்ன வாங்கித் தருவதென!

ஆண்டுகளாக நான்
வாங்கித் தந்துகொண்டிருக்கும் பலூனை
எப்படி தடை செய்வதென!

ப்ரியங்களின்
தொடர் செய்கைகளை
திடீரென்று மாற்றிக்கொள்ள
எத்தனை தடுமாறுகிறது
இந்த மனம்!

அக்காள்
கலர்கலராய்
நான்கு பலூன்களுடன்
ஊர் போய்க் கொண்டிருக்கிறாள்..

யாத்திரி..

ஜோசப் பிராட்ஸ்கி

நல்லதிற்கும் கெட்டதிற்கும் நடக்கும் யுத்தம்தான் வாழ்க்கை என்கிறார்கள்.அது நிஜமில்லை.மோசத்திற்கும் படுமோசத்திற்குமான போராட்டமே நம் கால வாழ்க்கை

-ஜோசப் பிராட்ஸ்கி

இவோ ஆண்டிரிச்

எது காயப்படுத்தவில்லையோ, அது வாழ்க்கை அல்ல.
எது கடந்துபோகவில்லையோ, அது மகிழ்ச்சியல்ல.

-இவோ ஆண்ட்ரிச்

ஓஷோ

இரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்.முதலாவது
"நீ எப்பொழுது பிறருக்கு எப்போது வாக்குறுதி கொடுத்தாலும் அதை நேர்மையாக இருந்து நிறைவேற்று.இரண்டாவது யாருக்கும் எந்த வாக்குறுதியையும் கொடுக்காதே

-ஓஷோ

யாத்திரி

சாப்பிடமாட்டேன் என்று எங்கு கோபித்துக்கொள்ள முடிகிறதோ அதுதான் வீடு..
எந்த வகையிலாவது நமக்காக நம் நலனுக்காக 
ஒருவர் கவலைப்பட வேண்டுமென்று விரும்புகிறோம் அதற்காகத்தான் அன்பு..

யாத்திரி..

வைரமுத்து

சுவாசிக்கும் வரை இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.
வாசிக்கும் வரை மனிதன்
சுத்திகரிக்கப்படுகிறான்

-வைரமுத்து

மகுடேசுவரன்

சாலையோரத்தில் 
கரும்புச் சாற்றுக் கடை 
போட்டிருக்கிறார் 
பள்ளி ஆசிரியர். 

பத்து ஏக்கர் 
புன்செய் இருந்தும் பயனின்றி 
மண்வெட்டியாளாகக் 
கட்டுமானப் பணிக்குச் 
செல்கிறார் 
புளியம்பட்டிக்காரர். 

சொந்த வீட்டை 
விற்றுவிட்டு 
ஒற்றிக்கு 
வீடு பார்க்கிறார் 
நண்பர்.

தொடர்ந்து 
வேலை கிடைக்காததால் 
கறிக்கடைக்குப் போகும் அவர் 
நல்ல தையற்காரர். 

தவணைக்கு வாங்கிய 
நிலைப்பேழையைத் 
திருப்பி எடுத்துக்கொள்ளச்  
சொல்கிறார் 
அண்டைவீட்டார். 

“எல்லாவற்றையும் 
பரப்பி வைத்திருக்கிறேன். 
எப்படி எப்போது மீளுமென்று  
தெரியவில்லை” என்கிறார் 
தொழில்வல்லார். 

பலரும் தத்தம் 
வாழ்க்கைத் தகுதிகளிலிருந்து 
பல படிகள் 
இறங்கி நிற்கிறார்கள். 

இப்போதைக்கு 
மூச்சு விட்டுக்கொண்டிருந்தாலாவது 
பின்னொருநாள் 
மீண்டுவிடலாம் என்ற 
நம்பிக்கையைத் தவிர 
அவர்களிடம் வேறில்லை..

மகுடேஸ்வரன்..

சுந்தர ராமசாமி

மெளனம்  உன்னதமானது. அது கேள்வியை உயிரோடு வைத்திருக்கிறது.கேள்வியைச் சீரழிக்காமல் பார்த்துக் கொள்கிறது.பதில் உளறல்கள் கேள்வியைத் துவம்சம் செய்துவிடுகிறது.

-சுந்தர ராமசாமி

சுப்ரமணிய ராஜூ

கிழம்

நேற்றைய கவலையில்
இன்றைய காலையும்
இன்றைய மாலைக்கு
பிற்பகல் நினைவும்
நாளைய பயத்தில்
இன்னொரு இரவையும்
கழித்தே நாட்களை
கடத்திய பின்

எண்ணிப்பார்த்தால்
எழுவத்தி நாலு.

-சுப்ரமணிய ராஜூ

முத்துவேல்

முத்துவேல் கவிதைகள்..

>பழுத்த இலை ஒன்று மரத்திலிருந்து அவிழ்வதும்
பனம்பழம் அதுவாய் கனிந்து வீழ்வதும்
அடை மழைக்கால ஏரி மடை உடைவதும்
சிறு காற்றில்
செவ்வரளி உதிர்வதும் போலத்தான்
அன்பின் நிலையதும்..


>ஞாபகம்
ஒரு பொல்லாத மிருகம்
நிகழ்காலத்தை காலடியில் போட்டு மிதித்துக் கொண்டு
இறந்த காலத்திற்கு எடுத்து தருகிறது இதயத்தை..


>என் பெயர்
எவ்வளவு சுமையானதாக இருக்கும் உனக்கு
வேண்டாம்
அதை கழட்டி உருவி கள்ளிப் புதருக்குள் வீசிவிட்டுப் போ..


>புறக்கணிக்கப்பட்ட அன்பு
தாய் இறந்த 
கண் திறவா நாய்க்குட்டியாக சாலையோரம் நடுங்குகிறது
மழையில்..

Godfather இயக்குநர்

நீங்கள் அதிக வெற்றிப்படங்களை தருகிறீர். வெற்றியின் ரகசியம் என்ன?

நீங்கள் வெற்றி பெற வேண்டுமெனில் மணமுடித்திருப்பது அவசியம். (சிரிப்பு) மணமுடித்தவர் மனது வெகு சீக்கிரம் சமநிலை அடைகிறது. ஆழமான சிந்தனைகளையும் தூண்டும்.

The Godfather பட இயக்குநர் Francis Ford Coppola

சுப.வீ

ஒருவன் செய்த பிழையை அவன் முகத்துக்கு நேரே பரிவாய் இதமாய் எடுத்துச் சொல்லுதல் அறங்கூறுதல்.

ஒருவன் செய்த அல்லது செய்யாத பிழையை அவன் இல்லாத இடத்தில் கூறுவது புறங்கூறுதல்

-சுப.வீ

மனுஷ்ய புத்திரன்

அன்பின் துயர நிலங்களைக் கடக்க பொது வழிகள் ஏதும் இல்லை! 

- மனுஷ்யபுத்திரன்

லீனா மணிமேகலை

ரத்தம் பேசும், ரத்தம் மணக்கும், ரத்தம் பரப்பி வைத்திருக்கும்
காட்சியாய் நகரம்..

ஆட்கொல்லி நோயின்
ஓருடலிலிருந்து
ரத்தம், 
கருக்கலைப்பின்
ரத்தம்,
பாவ மன்னிப்பின் ரத்தம், கருணையின் ரத்தம், 
காவின் ரத்தம்,
ஒரு உடலிலிருந்து மற்றதற்கு பீய்ச்சப்படும் ரத்தம்,
பருகும் ரத்தம், 
புராண நாயகர்களின் ரத்தம், கிறிஸ்துவின் ரத்தம்,
கருணைக் கொலையின் ரத்தம், தண்ணீரை விட அடர்ந்த குடும்ப
ரத்தம், 
சொந்த ரத்தம்.
விபத்தில், காயத்தில், காமத்தில், கல்வெட்டுகளில் காய்ந்த
ரத்தம்..

தொலைக்காட்சியில், சினிமாவில், கொலையின்,
தியாகத்தின், பழிதீர்ப்பின், துரோகத்தின், பலியின்,
எச்சரிக்கையின், அச்சுறுத்தலின், அபாயத்தின் புனைவு ரத்தம்..

பெயரில் உள்ள ரத்தம், பொது வெளிப்பாட்டின் ரத்தம், செம்மறி
ஆட்டின் ரத்தம், மூதாதையின் ரத்தம். சேவல் குரல் வளையின்,
ரத்த சகோதரர்களின், ரோஜா முட்களின், நிலவின், காட்டேறிப்
பற்களின், கண்ணகியின், பேய்க்கதைகளின் உறைந்த ரத்தம்..

கண்ணீர், வியர்வை என வெளியேறும் ரத்தம், சனிக்கிழமை
இரவின் ரத்தம், சுடப்பட்ட, சுட்டு மூடப்பட்ட, சிறு கோடென
பிளக்கப்பட்ட,
வெட்டப்பட்ட,
குரல்வளை கிழிந்த,
ஊறிய , விஷக்
மூக்குடைந்த, வயிற்றுப்
கொடுக்குகளின் வழிந்த ரத்தம்..

புலனாய்வு
வெண்ணங்கியில்,
புண்களில்
நிபுணனின்
கைகளில்,
மருத்துவனின்
கசாப்பு
கடைக்காரனின் போர்த்தலில்,
பிச்சைக்காரனின் ஏந்தலில், சாமியாடியின் சலங்கையில் தெறித்த
ரத்தம்..

பெரும் யுத்தங்களில், கூட்டுக் கொலைகளில், இன அழிப்புகளில்,
வாய்க்கால்களில், ஆறுகளில், மணல் மேடுகளில், உயர்ந்த
கட்டடங்களில், நாட்டின் எல்லைகளில் ஊறும் ரத்தம்..

குழந்தைகளின் அறைந்த காதுகளில், மனைவியின் கிழிந்த
உதடுகளில், அவ்விள வயதுக்காரனின் பெயர்ந்த தாடையில்,
அவசர சிகிச்சைப் பிரிவுகளில், கார்களின் பின்புற இருக்கைகளில்,
தார்ச்சாலைகளில், காவல் நிலைய கண்காணிப்பு கொட்டடிகளில்,
தெருவில் பொருதி சரியும் உடல்களில்,
துப்பாக்கி
சல்லடையாக்கப்பட்ட மனித உடல் துவாரங்களில், செய்தித்
தாள்களில்,
கைக்
குட்டைகளில்
இன்னும் உடைகளில்
ஒட்டிக்கொண்டும் வீடு வந்து சேர்ந்துவிடும் ரத்தம்..

விந்தை, புனிதம், மாந்த்ரீகம், மதம், அதிகாரம், வரலாறு கோரும்
ரத்தம்..

எங்கெங்கும் ரத்தம்..

எங்கெங்கும் ரத்தம்..

ஆனால் ரத்தத்தின் ரத்தம், கத்தி கீறாத, அழிவை நிகழ்த்தாத வனமுறை இல்லாத மாதவிடாய் இரத்தம்.. 
மறைவிடம் ஒடி
அறையில் அடைத்து, பொருத்துகளை மாற்றும் வேளையிலும், உறிஞ்சும் துணியில் உலர்ந்து விறைத்து கெட்டித்த, பெண்கள் தவிர யாரும் காண முடியாத, ஊற்றி அலசி தடயங்கள் துடைத்து அருவருக்கப்பட்ட கருவறையின் தூய இரத்தம்..

நூற்றாண்டு விம்மல், புராதன ஊற்று, நிராயுதபாணி, மெளன நீர்வீழ்ச்சி, ஒவ்வொரு பிறப்பும் அருந்தும் ரகசிய ரத்தம் ரத்தத்தின் மூலம் தூமை.. ரத்தத்தின் அந்தம் தூமை...

லீனா மணிமேகலை..

வாலி

கண்ணதாசன் இறந்ததற்கு காரணம் மதுவருந்தியது, இதை அறிந்து மது வருந்தியது
#வாலி

வைரமுத்து

பொணம் காக்கும் ராத்திரிதான் இருப்பதிலேயே இறுக்கமான ராத்திரி.சோகத்தையும் கண்ணீரையும் நீட்டிக்க முடியாமல் வேளாவேளைக்கு ஆக்கிக்கொண்டு அந்த சோற்றை மனசு ஒப்பித் தின்னவும் முடியாமல், கண்ணீர் வேர்வை என்ற பிசக்குகளோடு தூங்காமல் தூக்கத்தை துரத்தவும் முடியாமல் விடியும் வரைக்கும் கொட்டக்கொட்ட விழித்திருப்பது பிணத்தின் சொந்தக்காரங்களுக்கே கூட மரண அவஸ்தை

-வைரமுத்து

பேயோன்

இன்றைக்காக வாழ்வேன்
நாளையும்
இதே கதைதான்

-பேயோன்

யாத்திரி

உன்னை அதிகம் தொந்தரவு செய்துவிட்டேன்.. மன்னித்துவிடு..
இனி மாட்டேன்..
நிரந்தரமாகப் போய்விடுகிறேன்.. என்றெல்லாம் சொல்லிவிட்டு வந்த மறு நிமிடத்திலேயே அப்படியெல்லாம் இல்லை” என்று
நீ சொல்லும் சொல்லுக்கு
தவம் கிடக்கும்
பரிதவிப்பை
என்ன செய்வது.. கொன்றழித்துப் போ..

யாத்திரி..

யாத்திரி

ஆண்குணத்தோடு
முட்டிமோதி
முரண்பட்டு
சமரசம் செய்து அயர்ந்து
தனக்குப் பிடித்த ஆணை மட்டுமாவது தன்னைப்போலவே பெண்ணாக மாற்றி விட துடிக்கிறாள்..

யாத்திரி..

ஜெஃப்ரி கிரீஃப் தமிழில் இறையன்பு

நண்பர்கள் நான்கு விதம் 
அவசிய நண்பர்கள், ஆத்மார்த்த நண்பர்கள், நெடுங்கால நண்பர்கள், பேருக்கு நண்பர்கள்.

அவசிய நண்பர்கள் நம் உள் வட்டத்தில் இருக்கும் உன்னத மானவர்கள். கொடி மரம் போல எல்லா தருணங்களிலும் இருப்பார்கள். நமக்கு எது ஏற்பட்டாலும் முதலில் அவர்களுக்கு தான் சொல்லத் தோன்றும். இவர்களின் பெருந்தன்மையே முக்கிய காரணம்.

ஆத்மார்த்த நண்பர்கள் நெருக்கமானவர்கள் அல்ல. ஆனால் நெஞ்சுக்கு உகந்தவர்கள். எல்லா நிகழ்வுகளிலும் பங்கெடுக்க மாட்டார்கள். அதே நேரத்தில் எதையும் அவர்களிடம் மனம் விட்டு பேச முடியும்.இவர்களின் ஆலோசனைக்கு மதிப்பளிப்போம். நெருங்கிய நண்பரிடம் சொல்ல முடியாததை கூட இவர்களிடம் சொல்லுவோம்.அவர்களுக்கு நம்மைத் தெரியும் என்பதே மற்றவர்களுக்குத் தெரியாது.அவரிடம் இறக்கி வைத்தால் அத்தனை பாரமும் குறையும்

நெடுங்கால நண்பர்கள் எல்லாருக்கும் உண்டு. சின்ன வயதிலிருந்து பழகுவார்கள். உடன் இருப்பார்கள். ஒரே தெருவில் இருப்பார்கள். சிலர் அவசிய நண்பர்கள் ஆவதும் உண்டு, இது அணுகு முறையை பொறுத்து அமையும்.

பேருக்கு நண்பர்கள் நம்மை பாதித்த சம்பவங்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம். ரகசியமாய் வைத்திருப்பார்களா என்ற சந்தேகம் நமக்குள் இருக்கும். ஒரே மைதானத்தில் விளையாடுவது அவ்வப்போது பார்ப்பது என்று இருக்கும் அந்த உறவு முறையில் எந்தவித பொறுப்பும் இருப்பதில்லை

-ஜெஃப்ரி கிரீஃப்
தமிழில் இறையன்பு

மர்லின்

கழுகினை தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே..
அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு கழுத்தில் அலகால் கொத்தும்..
ஆனால் மறுபுறம் கழுகோ தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணாக்காமல் பதில் தாக்குதல் நடத்தாமல் இருக்கும்..
கழுகு எளிமையாக தன் இறகுகளை விரித்து வானத்தை நோக்கி உயர பறக்கத் துவங்கும்.. 
உயரம் கூட கூட காகம் சுவாசிக்க கடும் சிரமம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் குறைந்து கீழே விழுந்து விடும்..
உங்கள் பொன்னான நேரத்தை காகங்களோடு வீணாக்குவதை நிறுத்துங்கள்..

மாறாக உங்கள் உயரத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லுங்கள் தானாகவே காணாமல் போய்விடுவார்கள்..
நீங்கள் கழுகா அல்லது காகமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்..  
#மர்லின்

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

மானிட இனத்திற்குப் பெரிய அச்சுறுத்தல்
தீயவர்கள் இழைக்கும் தீங்கு அல்ல.மாறாக, நல்லவர்கள் செயலற்றியிருப்பது தான்

-மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

வழிப்போக்கன்

நான் மட்டும் இங்கு
பிழைத்திருப்பது குறித்தும்
மரிப்பது குறித்தும்
மகிழ்ந்து கொள்ளவோ
வருத்தம் கொள்ளவோ
இங்கே தனியாய் என்ன இருக்கிறது

விதிக்கப்பட்ட ஆயுளை
ஆர்பாட்டமின்றி அன்பைப் பகிர்ந்து
வாழ்ந்து கடப்பதைத் தவிர..

வழிப்போக்கன்..

கே.என்.சிவராமன்

எந்த நாற்பதாவது அத்தியாயத்தில், ‘கர்ணனின் கவசம்’ முடிந்ததோ, அந்த நாற்பதாவது அத்தியாயம் தாண்டியும் பயணிக்கிறது ‘சகுனியின் தாயம்’. :)  

கே. என். சிவராமன்

வழிப்போக்கன்

நான் செத்த பின்பும்
யாராலோ நீரூற்றப்பட்டு
எனது தோட்டத்து மல்லிகை
வாசத்துடன் பூக்கப் போகிறது
எனது வீட்டில் உள்ளவர்கள்
உண்ணப் போகிறார்கள்
கவலை மறந்து
உறங்கப் போகிறார்கள்
காலையில் கிழக்கே பொதுவாய்
கதிரவன் உதிக்கப் போகிறது
மாலையில் மேற்கே பொதுவாய்
கதிரவன் மறையப் போகிறது
சுழலும் பூமி சுழன்று கொண்டு தான்
இருக்கப் போகிறது

பின் நான் மட்டும் இங்கு
பிழைத்திருப்பது குறித்தும்
மரிப்பது குறித்தும்
மகிழ்ந்து கொள்ளவோ
வருத்தம் கொள்ளவோ
இங்கே தனியாய் என்ன இருக்கிறது

விதிக்கப்பட்ட ஆயுளை
ஆர்பாட்டமின்றி அன்பைப் பகிர்ந்து
வாழ்ந்து கடப்பதைத் தவிர..

வழிப்போக்கன்..

அப்துல்கலாம்

யாரையும் தோற்கடிப்பது எளிது
எவரையும் வெற்றிகொள்வது கடினம்.

It is very easy to defeat someone but
It is very hard to win anyone

#அப்துல்கலாம் 
#APJABDULKALAMBIRTHDAY

சுந்தரராமசாமி

ஆயிரம்பக்கங்களில் புத்தகம் எழுதுவோர் பற்றி..

"அவர்களை மே தினத்தில் கெளரவிக்க வேண்டும்"
-சுந்தரராமசாமி.

ஓஷோ

நினைத்தல் என்பது அறிந்ததை அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை நினைக்கிறோம்.அவ்வாறு நினைக்கும்போது அறிந்த ஒன்று நேர்த்தியாகிக் கொண்டே செல்லும்.ஆனால் அறியாத ஒன்றினை அறிந்து கொள்ள முடியாது

-ஓஷோ

சா.கா.பாரதிராஜா

சிகிச்சையின்றி பலநாட்களாய்
மருத்துவமனையில்
நோயாளிப் படுக்கைகள்

-சா.கா.பாரதிராஜா

ஜென்

புத்தா என்பது அறிவு.அதைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.எப்போது நான் அறிவாளியாகிவிட்டேன் என நினைக்கிறாயோ அப்போதே முட்டாளிவிடுவாய்.அறிவுத் தேடலில் திருப்தி என்பதே கிடையாது.

-ஜென்

பேயோன்

நேற்று பெய்த கனமழையில்
பிரசவித்த அழுக்குக் குளத்தில்
ஒரு ஆட்டோ புகுந்து எழுப்பிய
அலையில் நனைகின்றன என் கால்கள்
நடுத்தெருவில் பாக்கெட் கடல்

-பேயோன்

கலீல் ஜிப்ரான்

அதிகம் விலகிச் செல்லாதே
திரும்புவது கடினமாகிவிடும்

-கலீல் ஜிப்ரான்

வழிப்போக்கன்

உன்னையே நான் கண்ணிமைக்காமல்
உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதை கவனிக்காமல்
அந்த ஆடித் திருவிழாவில் நீ
சிறுபிள்ளையாய் மாறி
சோப்பு நீர்க் குமிழிகளை
உடைத்து உடைத்து உன்னையே மறந்து
விளையாடிக்கொண்டிருந்தாய்...

இந்தப் பக்கமாய் எனது உலகம்
உடைந்து நொறுங்கியதையும்
உனக்கான எனது இதயம்
அந்தக் குமிழிகளைப் போலவே
வெடித்துச் சிதறியதையும் அறியாமலே..

நீ பிரிந்து போய்
இத்தனையாண்டுகள்
கடந்த போதும்
இப்போதும் கூட
குமிழிகளை உடைத்து விளையாடும்
குமரிகளைப் பார்த்தால்
பதைக்கிறது மனம்
நடுங்குகிறது விரல்
யாரோ ஒருவனின் உலகம்
அந்த பக்கம்
உடைந்து கொண்டிருப்பதையெண்ணி..

வழிப்போக்கன்..

யுகபாரதி

பரஸ்பர அறிமுகங்கள்
நலமா என்பதிலிருந்தே தொடங்குவதால்
நலமில்லாமல்தான் இருக்க முடியும் என எல்லோரும் நம்புகிறார்கள்

- யுகபாரதி

13/10/2020

ஜென்

புத்தா என்பது அறிவு.அதைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.எப்போது நான் அறிவாளியாகிவிட்டேன் என நினைக்கிறாயோ அப்போதே முட்டாளிவிடுவாய்.அறிவுத் தேடலில் திருப்தி என்பதே கிடையாது.

-ஜென்

காந்தி

பலம் நிறைந்தவர்கள் பெறும் வாய்ப்பை பலவீனமானவர்களும் பெறும் நிலையே மக்களாட்சி

-காந்தி

ராஜநாயஹம்

The brain is wider than the sky

செஸ் விளையாட்டை வேடிக்கை பார்ப்பவனுக்கு காயின் மூவ் குறித்த ஐடியா வரும்.லைவ் கிரிக்கெட்டில் எல்லா பேட்ஸ்மேனுக்கும் அறிவுரை சொல்வான்

-ராஜநாயஹம்

ஓஷோ

உலகில் இருவகை மனம் உண்டு.அதிகாரம் செய்யக்கூடிய மனம்-
ஆண்மனம்;அதிகாரம் செய்யக்கூடியதை விரும்பும் மனம்-பெண்மனம்.

ஆண்மனம் கொண்ட பெண்களும்,பெண்மனம் கொண்ட ஆண்களுமாக இருக்கிறார்கள்.

-ஓஷோ

ஷான்

தொடுவாரில்லை
கொள்வாரில்லை
சலனமற்றுக் கிடக்கிறது
ஒற்றைச் செருப்பைப்
போன்றதொரு வாழ்க்கை.

-ஷான்

சேயோன் யாழ்வேந்தன்

ஓர் அரிசியில் பெயர் எழுத

ஓர் அரிசியில் என் பெயர் எழுத
இருபது ரூபாய் கட்டணம் என்பது
ரொம்ப அநியாயமாகப் பட்டது.
ஒவ்வொரு அரிசியிலும்
உண்பவன் பெயர் எழுதியிருக்குமென்று
அம்மா அடிக்கடி சொல்வாள் -
ஊறவைக்கையில் பார்த்திருக்கலாம்.
வேக வைத்ததில் அழிந்திருக்கலாம்.
மட்டமான அரிசியில்
ஏழைகளின் பெயர்களையும்
பாசுமதி அரிசியில்
பணக்காரன் பெயரையும்
ஆண்டவனே எழுதும்போது
நாமென்ன செய்யமுடியும் நடுவே?
அரசுக் கிடங்குகளில்
வீணாகும் அரிசிகளில்
புழுக்களின் பெயரை
எழுதியவன் 
காருண்யமூர்த்தி

-சேயோன் யாழ்வேந்தன்

விக்ரமாதித்யன்

சாமான்யனுக்கு 
திதி
பிரமுகனுக்கு
நினைவு நாள்

-விக்ரமாதித்யன்

வழிப்போக்கன்

வாழ்வதில் எனக்கொன்றும் வருத்தங்களோ சிக்கல்களோ எப்போதும் இருந்ததில்லை..
இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டுமென்ற உங்கள் நியதிகளிலும் நிபந்தனைகளிலும் நிரம்பியிருக்கிறது
எப்போதும் எனக்கான சிக்கல்..

வழிப்போக்கன்..🐅

முருகன். சுந்தரபாண்டியன்

நீ திரும்பக் கேட்காத ஏதோ ஒன்றுதான்
இன்னும் என்னுள் நம்மை
நிறைத்துக் கொண்டேயிருக்கிறது
என் உயிராக...

- முருகன். சுந்தரபாண்டியன்

ப.உமா மகேஸ்வரி

சின்ன புறக்கணிப்புதான்
மனதை எவ்வளவு வருத்துகிறது

சின்ன நெளிவுதான்
எவ்வளவு மரியாதை தருகிறது

சின்ன புன்னகைதான்
எவ்வளவு பகையை உடைக்கிறது

சின்னச் சின்னதுதான்
எவ்வளவு பெரிதாக இருக்கிறது?

-ப.உமா மகேஸ்வரி

காந்தி

அதிகாரம் ஒரு முள்கிரீடம். அதிகாரத்தில் நீங்கள் போய் அமர்ந்ததும் அதிகாரம் நீங்கள் விரும்பியபடி செய்ய அனுமதிக்காது.அது ஒரு சுமையாகத்தான் இருக்கும்

-காந்தி

அப்துற் றஹீம்

பணத்தின் முக்கிய ஆற்றல் என்னவென்றால் அது நம்முடைய தேவைகளை நிறைவு செய்வதுடன்..
99 சதவீத தேவைகளை உற்பத்தியும் செய்துவிடுகிறது

-அப்துற் றஹீம்

நறுமுகை தேவி

நண்பர்கள் என்றாலும்
சில விளையாட்டுகளை
எதிர் எதிர் இருந்து ஆட வேண்டியதாய்
சூழல் வாய்த்து விடுகின்றது..

சிரித்துக் கொண்டே காய்களை நகர்த்துகிறோம்,
சேனைகளைப் பறிகொடுத்த போதும்
சிரிப்பு ஒட்டிக் கொண்டு தான் இருந்தது..

எந்த நகர்த்தலின் போது
நம்மிடையே வன்மம் சூல் கொண்டது
என்பதை இருவருமே உணரவில்லை..

உன் கடைசி நகர்த்தலில்
என்னிடமிருந்த பாதுகாப்புக்கவசம்
உடைபட்டது..

தாளவியலா அவமானத்தில்
நான் நகர்த்திய காய்
உன் ராஜாவைக் குறி வைத்து விட
யோசிக்க அவகாசமில்லாதொரு நொடியில்
மறைக்கப்பட்ட உன் குறுங்கத்தியை
என் குரல்வளைக்கு நகர்த்தியிருந்தாய்
இப்போதும் ஒரு கோடு போன்ற
குறுஞ்சிரிப்பு மீதமிருக்கிறது என்னிடம்..

நறுமுகைதேவி..