27/10/2020

வழிப்போக்கன்

நான் செத்த பின்பும்
யாராலோ நீரூற்றப்பட்டு
எனது தோட்டத்து மல்லிகை
வாசத்துடன் பூக்கப் போகிறது
எனது வீட்டில் உள்ளவர்கள்
உண்ணப் போகிறார்கள்
கவலை மறந்து
உறங்கப் போகிறார்கள்
காலையில் கிழக்கே பொதுவாய்
கதிரவன் உதிக்கப் போகிறது
மாலையில் மேற்கே பொதுவாய்
கதிரவன் மறையப் போகிறது
சுழலும் பூமி சுழன்று கொண்டு தான்
இருக்கப் போகிறது

பின் நான் மட்டும் இங்கு
பிழைத்திருப்பது குறித்தும்
மரிப்பது குறித்தும்
மகிழ்ந்து கொள்ளவோ
வருத்தம் கொள்ளவோ
இங்கே தனியாய் என்ன இருக்கிறது

விதிக்கப்பட்ட ஆயுளை
ஆர்பாட்டமின்றி அன்பைப் பகிர்ந்து
வாழ்ந்து கடப்பதைத் தவிர..

வழிப்போக்கன்..