ஓர் அரிசியில் பெயர் எழுத
ஓர் அரிசியில் என் பெயர் எழுத
இருபது ரூபாய் கட்டணம் என்பது
ரொம்ப அநியாயமாகப் பட்டது.
ஒவ்வொரு அரிசியிலும்
உண்பவன் பெயர் எழுதியிருக்குமென்று
அம்மா அடிக்கடி சொல்வாள் -
ஊறவைக்கையில் பார்த்திருக்கலாம்.
வேக வைத்ததில் அழிந்திருக்கலாம்.
மட்டமான அரிசியில்
ஏழைகளின் பெயர்களையும்
பாசுமதி அரிசியில்
பணக்காரன் பெயரையும்
ஆண்டவனே எழுதும்போது
நாமென்ன செய்யமுடியும் நடுவே?
அரசுக் கிடங்குகளில்
வீணாகும் அரிசிகளில்
புழுக்களின் பெயரை
எழுதியவன்
காருண்யமூர்த்தி
-சேயோன் யாழ்வேந்தன்