ஊர்த்திருவிழாவிற்கு
அக்காள் வந்திருந்தாள்
பிள்ளைகளுக்கு விடுமுறை கிடைக்கவில்லை
என்று வருந்தினாள்,
அவள் ஊர்திரும்பும் போது
நினைவாக
நான்கு பலூன்கள் வாங்கித்தந்து
"பிள்ளைகளிடம் சென்று கொடு” என்றேன்.
அக்கா சிரித்துக்கொண்டாள்,
"உன் மருமகப்பிள்ளைக என்ன இன்னும்
விரல் சூப்பிட்டு இருக்குன்னா நெனைச்ச,
குத்தவைக்கப் போற வயசு வந்துட்டுடா அவளுக்கு "..
எனக்குத் தெரியவில்லை
வளர்ந்த பெண்ணுக்கு
திருவிழாவில்
என்ன வாங்கித் தருவதென!
ஆண்டுகளாக நான்
வாங்கித் தந்துகொண்டிருக்கும் பலூனை
எப்படி தடை செய்வதென!
ப்ரியங்களின்
தொடர் செய்கைகளை
திடீரென்று மாற்றிக்கொள்ள
எத்தனை தடுமாறுகிறது
இந்த மனம்!
அக்காள்
கலர்கலராய்
நான்கு பலூன்களுடன்
ஊர் போய்க் கொண்டிருக்கிறாள்..
யாத்திரி..