"என் அறைக்கதவுகள்
திறந்தேதான் இருக்கின்றன
நீங்கள் எப்பொழுது
வேண்டுமானாலும்
நுழையலாம்
என்னுடன் தேநீர் பருகலாம்
என் அலமாரிப் புத்தகங்களைப்
புரட்டிப் பார்க்கலாம்
சுவற்றில் தொங்கும்
ஓவியங்கள் குறித்துக் கருத்துக்கள் கூறலாம்
சில்லிடும் மெல்லிசை அதிர்வுகளில்
மூழ்கிக் கிடக்கலாம்
மேலும்
உங்களுக்கு விருப்பமிருந்தால்
நான் வருடிப்பார்ப்பதற்கென
கொஞ்சம் எதார்த்தங்களை
விட்டுச் செல்ல முயற்சிக்கலாம்
அவ்வாறின்றி என் அறை
உங்களுக்கு சலிப்பேற்படுத்தும் பட்சத்தில்
அறைக்கதவுகள்
திறந்தேதான் இருக்கின்றன."
- ச.பிரியா