>என் மனைவியும் ஒரு காலத்தில் நாணமுற்றவள் தான்
என்று என்னும் கணவன் அறியாமல்
சிரித்து விடுகிறான்..
>இப்போதுதான்
தோன்றியதா என்பதற்கும்
இப்போதாவது
தோன்றியதே என்பதற்கும்
நடுவில் உள்ள கடலில்
யாரோ தத்தளிக்கிறார்கள்..
>காற்றைத் தடுத்து
கதிர் வெம்மை ஏற்கும் கண்ணாடி சாளரமா அவள்?
நேர்காணத் தவிர்த்து
நினைவூறி வாழ்கிறாள்..
>பாழடைந்த கோவிலை வணங்குவதில்லை..
அதனுள் சென்று வழிபடுவதும் இல்லை..
அங்கே தெய்வம் இல்லை என்பதா காரணம்?
அதில் மனிதர் இல்லை என்பதே காரணம்..
தெய்வம் நீ என்றுணர்..
>புல் பூண்டு அற்று
அழிந்தது உலகு..
ஓர் உயிர் பிழைக்கவில்லை எல்லாம் முடிந்தது..
குற்றுயிராய் கிடந்த
கடைசி மனிதன்
தன் முகநூல் பக்கத்தில்
இறுதி செய்தியை பதிந்தான்..
புரியாத எழுத்துருவில்
அதற்கு
ஒரு லைக் விழுந்தது..
>ஒற்றையடிப்பாதைக்கு
ஒருபோதும் இல்லை
நான்கு முனை சந்திப்பு..
>குடி அகன்ற வாடகை வீடு
குழந்தையின் சுவர்க் கிறுக்கல்..
வளர்ந்த குழந்தை
தன் முதல் எழுத்தை தேடி
வந்தால் என் செய்ய?..
>உன்னருகில் நான் ஓர்
உவமைபோல்
நிற்கவேண்டும்..
மகுடேஸ்வரன்...