அரைவட்டக் கிளிஞ்சல்
கடல் பார்க்கப் போயிருந்த சிறுமி
கரையில் அமர்ந்து
கைகளால் மணலை அளந்தபோது
விரல்களில் சிக்கிய
பழுப்பு நிற
அரைவட்டக் கிளிஞ்சல் ஒன்றை
நெடுநேரம் உள்ளங்கையில் வைத்து
அழகு பார்த்துப் பின்
எதையோ நினைத்தவளாய்க்
கடலில் வீசியெறிந்து திரும்பினாள்
தேடும் அலைகளின்
தேவையைத் தீர்த்துவைத்த நிம்மதியில்!
- தி.சிவசங்கரி