17/01/2018

கவிஜி

ஆன்மாவுக்குள் இருப்பதாக

அடிக்கடி சொல்வாய்..

சாந்தி அடையாமல் திரிகிறேன்....

எல்லாப் புரிதல்களும்

என் வசம் என்பாய்...

உனைப் புரியவில்லையே தோழி...

விட்டுப் போகாதே என்பது

உனதேக்கம்..

பார் பெண்ணே... விட்டுப் போனது

உன்கால் தடங்களே...

எனக்கான உயரம் நீ

என்று சொல்லி நாக்கு கடிப்பாய்..

தாழப் பறந்து அடிபடும்

சிறகுகளே இப்போதெனக்கு...

ஜீவ எழுத்தென்று

பாராட்டுவாய்..

ஜீவன் போன பின்னும்

காதல் சொல்லுதென் உயிரெழுத்து...

நீ இன்றி ஏதோ இழக்கிறேன்

என்றது நீதான்.. 

நீ இன்றி இழந்ததென்னவோ

என்னை நான்தான்...

இத்தனை கோபம் எதற்கென்று

தோள் சாய்த்துக் கொண்டவள் நீ..

இத்தனை சாபம் எதற்கென்று

கவியேந்தி கேட்கிறேன்...

நீ சொல்லும் 'என்னங்க' இன்னும்

இருக்கிறது என்னிடம்...

நான் தந்த 'அம்மு' எப்போதாவது

இருக்கிறதா உன்னிடம்...?

- கவிஜி