அம்மாக்களுக்கென
பல வரையறைகள் உண்டு...
கோலம் போடலாம்..
ஓவியம் வரையக் கூடாது..
கனவுகள் காணலாம்..
தூங்கக் கூடாது..
கண்களைக் கசக்கலாம்..
கவிதை எழுதக் கூடாது..
பறவைகளுக்கு சோறிடலாம்
சுதந்திரத்தைப் பற்றி பேசக்கூடாது..
வெறுப்பிற்குள் திணறலாம்
உறவுகளை முறிக்கக் கூடாது..
உதாசீனங்களுக்குள் உழலலாம்
உப்பிட்டு உண்ணக் கூடாது..
ஊமையாய் கண்ணீர் விடலாம்..
உயிர்த்துவிடக் கூடாது...
அவள் விடுதலையின் சம்மத எழுத்தான
'ம்'
அ- விற்கும் மா - விற்கும் இடையே
சிறை பட்டுக் கிடக்கிறது..
தன் இறகுகள்
ஒவ்வொன்றாகப் பிய்த்து
நெஞ்சக் கனலுக்கு விறகாக்குகிறாள்..
மொத்தக் குடும்பமும்
அக்கனலில்
குளிர்காய்கிறது..
அம்மாக்கள்
வாழ்வதாய்
நம்பிக்கொண்டிருக்கும்
வரையறை தாங்கிகள்!!
Shobana Narayanan