21/09/2018

குகன்

இப்போதெல்லாம் ...
தனிமை
பிடிக்கிறது ...

கூட்டம்
வெறுக்கிறது ...

தரையை விட்டு
அரை அடி
மேலே நடப்பதாய்
ஒரு அர்த்தமில்லாத
ஆணவம் வருகிறது ...
எல்லாப் பொருளும்
அழகாய்த் தெரிகிறது
என்னைத் தவிற ....

“ நடை மாற்று ...
எடை கூட்டு ...
அழகாய்த் தலைசீவு ...
வாரம் இருமுறை
தவறாது
முகச் சவரம் செய் “ ...
போர்க்கால
உத்தரவு பிறப்பிக்கிறது
என் மூளை ...

“ இப்படிப் பேசினால்
அவளுக்குப் பிடிக்காதோ “
பலத்த
யோசனைக்குப் பின்
பேச்சுக் குறைகிறது ....

“ ஒரு வேளை
நம்மை அவளுக்கு
பிடிக்காது போய்விடுமே “ ...
கடவுள் நம்பிக்கை
அதிகமாகிறது .....

பார்ப்பதற்கல்ல
கண்கள்
பேசுவதற்கு ....
புதுச் சித்தாந்தம்
உதயமாகிறது ...

பேசிய நேரங்களைவிட
பேசாத நேரங்களில் தான்
அதிகப் பேச்சு வருகிறது
எனக்குள் ...

படம் பார்க்க
திரையரங்கு போனால் ...
அளவுக்கு மீறிய
கற்பனை வந்து
ஆள் மாறாட்டம்
செய்கிறது ...

காற்று வாங்க
கடலுக்குப் போனால் ...
அலைச் சப்தம் கேட்பதால் ....

நாலு மணிக்கெல்லாம்
விடிந்து விட்டதா
எழுந்து விட்டதா
சூரியனைச்
சண்டைகிழுக்கிறது
எனக்குமுன்னே
எழுந்து கொள்கிற
என் மனது ....

மறதி
அதிகமாகிறது ...
வயது
குறைகிறது ....

ஒரு வகைத்
தூக்கமில்லா தூக்கம்
வருகிறது ....

ஒரு வேளை
எல்லோருக்கும்
இப்படித்தான் இருக்குமோ ...

இந்த மனபோதை
மிகுந்த
அழகான நாட்கள் ....
-      குகன்