25/09/2018

நஸ்புள்ளாஹ்

டயறியிலிருந்து...

வாசித்த சொற்கள் சிலவற்றை
எனது டயறியின் மய்யப் பகுதியில்
மூடிவைக்கிறேன்

நான் டயறியைத் திறந்து பார்க்கும்
மற்றொரு நாளில்
அவை வளர்ந்து
ஒரு பூனைக்குட்டியாகவோ
ஓர் அணில்பிள்ளையாகவோ
என்னைச் சந்திக்க வேண்டும் என்பது
எனது மனதின் இயங்குதல்

அதை
ஒருநாள் திறந்து பார்க்க
டயறியிலிருந்து
வினோத மிருகம் ஒன்று வெளியேறியது

பிறகு
அந்த மிருகம்
எனக்குள் வளர்ந்த
பூனைக்குட்டியையும்
அணில்பிள்ளையையும்
தின்னத் தொடங்கியது.

வழமைபோல் வாசித்துவிட்டு
இக்கவிதையையும் மறந்துவிடுங்கள்.

- ஏ.நஸ்புள்ளாஹ்