26/08/2018

லீனா மணிமேகலை

அவனை ஒரு வியாழக்கிழமை மதியத்தில்
மளிகைக் கடையில் சந்தித்தேன்
அவனை அப்படியே அச்சில் வார்த்தது போல் இருந்தால் அவனுடைய மகள்..

வகுப்பறையை விட்டு எல்லோரும் வெளியேறுவதற்கு காத்திருந்தவனாய்
திடுமென ஓடி வந்து கட்டிப்பிடித்துக்
கண்மண் தெரியாமல் முத்தம் தந்தவனா இவன்..

ஓடி போயிடலாம் வா என பள்ளி சீருடையுடன் ரயிலேற்றியவன்
எந்த நிலையத்தில் என்னை தவற விட்டான்..

செத்துப் போவதற்கு
சில மணித்துளிகளுக்கு முன்பாவது வாழ்ந்து விடலாம் என அவன் சொன்னதும்
சேர்ந்து வாழ்வதற்காக சாகத்தான் வேண்டும் என்றால் தனித்தனியாக வாழ்ந்து விடலாமே என நான் சொன்னதும் நேற்று போலிருக்கிறது..

இதோ நலமாய் இருக்கிறாயா என கேட்கக் கூட தோன்றாமல்
அவன் எதிரில்
நின்று கொண்டிருக்கும் என்னை அவனுடைய மகள் பார்க்கிறாள் பாம்பை பிடிப்பதைப் போல
நாங்கள் வாழ்க்கையைப் பிடித்து விளையாடியது தெரிந்தது போல சிரிக்கும் அவள் கால தேவதையாக தான் இருக்க முடியும்..

லீனா மணிமேகலை..