*இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம்*
எல்லா பள்ளிக்கூட வாசலிலும்
கைகள் நடுங்கும் ஒரு பாட்டி
வேர்கடலை விற்கிறாள்.
எல்லா தாலுகாபீஸ்
ஆலமரத்தடியிலும்
நாற்பது வயது கடந்த ஒருத்தர்
யாரிடமோ கையெழுத்து வாங்க
மஞ்சள் பையுடன் நிற்கிறார்.
எல்லா அடகுக் கடைக்
கம்மலிலும்
உலர்ந்துகொண்டிருக்கிறது
ப்ரியமில்லாமல் கழட்டிக்
கொடுத்த
ஒரு பெண்ணின் கண்ணீர்த் துளி.
எல்லா மெல்லிசைக் கச்சேரியிலும்
வெள்ளை பேண்ட்
வெள்ளை சட்டை அணிந்து
நெற்றி முழுக்க
விபூதி பூசிய ஒருவர்
'பச்சைக்கிளி... முத்துச்சரம்' என்று
டி.எம்.எஸ். குரலில் பாடுகிறார்.
எல்லா ரயில் நிலையத்திலும்
பறவை எச்சம் படிந்தபடி
வரவேற்கிறது
பூவரச மரத்தடியில்
ஒரு சிமெண்ட் பெஞ்ச்.
எல்லா மருத்துவர்களுக்கும்
வாய்த்துவிடுகிறது
புரியாத கையெழுத்து.
எல்லா வீடுகளிலும்
செல்லமாய் திட்டுகிறார்கள்
சாப்பிடும்போது
புத்தகம் படிக்காதே
ருசி தெரியாதென்று.
எனவேதான் பெரும்பாலும்
சாப்பிடும்போது
புத்தகம் படிக்கிறா்கள்
ருசி தெரியாதென்று.
எல்லா பொது நூலகத்திலும்
கடைசிப் பக்கம் கிழிந்த
பழைய புத்தகங்கள்
பெரும் படைப்புகளுக்கு
முடிவில்லை என்று
சவால் விடுகின்றன.
எல்லா மரண வீட்டிலும்
யாரோ ஒருவர்
யாருக்கும் சொல்லாமல்
சாப்பாட்டுக் கடை நோக்கி
மெல்ல நழுவுகிறார்.
எல்லா பேருந்து
நிலையத்திலும்
அகாலத்தில்
கணவனிடம்
கோபித்துக்கொண்டு
கைக்குழந்தையுடன்
கடைசிப் பேருந்திற்காய்
காத்திருக்கிறாள்
ஒரு இளம் தாய்.
-நா.முத்துக்குமார்