30/08/2020

மனுஷ்ய புத்திரன்

இப்படியும் யோசிப்பவர்கள்
இருக்கக் கூடும்
அடுத்த பண்டிகைக்கு இருப்போமா என்று
அடுத்த திருவிழாவிற்கு இருப்போமா என்று
அடுத்த புத்தாண்டிற்கு இருப்போமா என்று
அடுத்த தேர்தலுக்கு இருப்போமா என்று
அடுத்த மழைக்காலத்திற்கு இருப்போமா என்று

நான் ஒரு காதலர் தினத்தன்று நினைத்ததுண்டு
அடுத்த காதலர் தினத்தில்
இந்தக் காதல் இருக்குமா என்று

மனிதர்கள் காலத்தைக்கண்டு
அவ்வளவு அஞ்சுகிறோம்
எந்த ஒன்றையும் பிரிகிறபோது
மறுபடி காண்போமா என்பதில்
எவ்வளவோ சஞ்சலங்கள் வந்துவிடுகின்றன

ஒவ்வொன்றையும்
கடைசியாகக் காண்பதற்குத்தானே
இந்தக் கண்கள் இருக்கின்றன
இந்தக் கண்ணீர் இருக்கிறது

-மனுஷ்ய புத்திரன்