குற்றப்பரம்பரை..🐅
எழுத்தாளர் வேல ராமமூர்த்தி அவர்கள் எழுதிய நூல்..
1957 முதுகுளத்தூர் கலவரத்திற்கு முன்னால் கள்ளர் இனத்திற்கும் தலித் சாதியினருக்குப் நிலவிய இரண்டு பக்கங்களுக்கு இடையேயான அன்பு பாசம் அவர்களுக்கிடையே உள்ள இணக்கம் இது எல்லாவற்றையும் பற்றி நாவல் விரிவாகப் பேசுகிறது..
வேல ராமமூர்த்தி அவர்கள் தனது நாவல் முன்னுரையிலேயே நெருப்பாக வெடிக்கிறார் அதன் ஒரு சிறு பகுதி..
இந்த' இரண்டு சாதிக்காரன்களின் அரைஞாண் கயிறுகளை அறுத்து எறிந்து விட்டு, அம்மணமாய் நிறுத்தினால், 'எவன் எந்தச் சாதிக்காரன்? என அடையாளம் காண முடியாது. இருவருக்கும்
அப்படி ஓர் உருவ ஒற்றுமை இவர்களுக்குள் இப்போதிருக்கும் 'சாதிப் பகை', எப்போதும் இருந்ததா? இருந்ததில்லை..
ஒருவனுக்காக ஒருவன், உயிர் கொடுத்திருக்கிறான்; உணவளித்து இருக்கிறான்; ரத்தம் சிந்தி இருக்கிறான். இந்தப் பெண்ணின் மானத்தை, அவன் காப்பாற்றி இருக்கிறான்; அந்த தாயின் முலைப் பாலுண்டு இவன் வளர்ந்திருக்கிறார்.
தலைமுறைகளைச் சாகடிக்கும் இன்றைய பகையை, எப்படி எவன் மூட்டியது..
எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது எவன் கை,
வழியும் ரத்தத்தை நக்கிக் குடிப்பவர், இங்கு எவர் வரலாற்றைக் கறையாக்கி, வாக்குச் சேகரித்துக் கொழுப்பவன் எந்த அரசியல்வாதி..
பூர்வீகக் குடி இரண்டின் சாவுக் கணக்கு இங்கு சில சாதிக்காரர்களின் உண்டியலையும் சில சாதிக்காரர்களின் மனசையும்
நிரப்புகிறது...
பிற இனங்களுக்குள் நடந்தால் கைகலப்பு' என்றும், இந்த இரு சாதியினர் மோதினால், இனப்பெயரையும் குறித்து, சாதிக் கலவரம் என்றும் அக்னி வளர்க்கும், தர்மம் கெட்ட சில பத்திரிக்கைகளின் சூது, எவன் கண்ணையாவது உறுத்தியது உண்டா.. இவ்வாறு இன்னும் விரிவாக அந்த முன்னுரையில் கொந்தளிக்கிறார்..
நாவலில் முக்கியமான கட்டத்தில் வருகின்ற உரையாடல் ஒன்று🐅 மனுசனுக்கு மனுசன் என்னடா தீட்டு? உங்க புஞ்சையை .. அவன் மிதிக்கிறான்.. உங்க கலப்பையைப் புடிச்சு அவன் உழுகுறான். அவன் காலாலே மிதிச்சு கசக்குற கதிரிலே தான், நீங்க வாயாலே திங்கிற நெல்லும் தவசமும் ஒட்டி இருக்கு ? அதிலே எல்லாம் தீட்டு இல்லே.. தரையிலே ஊறும் தண்ணிக்கு மட்டும் எங்கிருந்து வந்தது தீடடு..
நாவலில் புதிதாக நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது அவற்றுள் சில..🐅
>அய்யாமார், முதலாளிமார் வீடுகள் நெறஞ்ச ஊர், வீட்டுக்கொரு “பாடுகாப்பான்" உண்டு. பாடுகாப்பானெல்லாம் சேரிக்காரர்கள் தான். காட்டு வேலை, களத்து வேலை கல்யாணம் சடங்கு வேலையிலிருந்து இழவு சொல்லிப் போய், எரியூட்டி திரும்புவது வரை எடுபிடி வேலையெல்லாம் 'பாடுகாப்பான்' பொறுப்பு..
>கள்ளர்கள் திருடச் செல்லும் பொழுது ஆட்காட்டி குருவி என்ற ஒருவகை குருவியே பயன்படுத்துவார்கள்..
சின்ன துளையிட்டு அதில் குருவியை அனுப்பி உள்ளே ஆட்கள் இருக்கிறார்களா என்று அறிவார்கள்.. உள்ளே ஆட்கள் இருந்தால் குருவி கீச் கீச் என்ற சத்தம் கொடுக்கும் அதை வைத்து கண்டு கொள்வார்கள்..
>கல்லிலே மாவு ஊத்தி, மாவுக்கு மேலே முட்டை ஊத்தி, முட்டைக்கு மேலே மாவு ஊத்தி, வேக வேக புரட்டிப்போட்டு சுடுகிற அங்காடித் தோசை..
>அந்தகாலத்தில் ஒவ்வொரு சமஸ்தானத்திலேயும் கட்டுப்பாடு உண்டு.. எட்டயபுரம் விசேஷமான ஒரு சமஸ்தானத்திலே ஒரு தடை இருந்தது. சமஸ்தானத்துக்குட்பட்ட குடியான சனங்கள், ஒன்னு.. ரெண்டு.. மூனுன்னு எண்ணுகிற போது 'எட்டு' என்கிற எண்ணை மட்டும் உச்சரிக்கக் கூடாது.. ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு, ஆறு, ஏழு, ராசா ஒன்பது, பத்துனு தான் எண்ணிப் போகணும் என்ன காரணம்னா... ராசா பேரு எட்டப்பராசா. எட்டுன்னு குடியான சனங்க வாயால சொல்றது ராசாவுக்கு அவமரியாதை..
>அந்த காலத்துல நல்ல தண்ணி கிடைக்கிற இடத்தில் தலித் சாதியினரை குடியேற விடல..
இதுபோல அங்கங்கு இன்னும் பல புதிய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம்..
கள்ளர்களை பற்றி கூறும் பொழுது
>அவர்கள் நம்பியவர்களுக்கு உயிரை கொடுக்கிறார்கள், நம்பிக்கை துரோகியை கொலை செய்கிறார்கள், வேட்டைச் சமூகத்தின் மிச்ச சொச்சங்கள் இவர்கள்..
>ஒரு வீரன் கையில் வெட்டுப்பட்டு சாகலாம் ஆனா ஒரு சதிகாரன் பறிக்கிற குழியிலே சறுக்கி கூட விழக்கூடாது..
>சோற்றைக் கூட நுனி விரலில் நாம் இப்போது சாப்பிடும் முறையை (அவர்கள் கை முழுவதும் அள்ளி சாப்பிடுபவர்கள்)அதிசயமாகப் பார்க்கிறார்கள்..
நாவலில் வரும் சில உவமைகள்..🐅
>பொறுமை இல்லாதவன் தவமும், பொலி காளையின் அவசரமும் ஒன்று..
>பரிக்கும் கைகள் இன்றி, சூடும் தலையின்றி, கானகத்தில் தானே முளைத்து மொட்டு விட்டு மலர்ந்து உதிரப் போகும் காட்டுப் பூ போல் இருந்தாள்..
>தான் விரும்பியவனையே கைபிடித்த குமரியின் உற்சாகத்தோடு மலை அடிவார மேடு பள்ளங்களில் குதிரை காற்றாய் பறந்து போனது..
>வீணையின் வடிவழகு, மலர்ந்து படுத்திருக்கும் ஒரு பேரழகி போல் இருந்தது..
>தோல் உரித்த நுங்கு நேரத்தில் பொழுது விடிந்து கொண்டிருந்தது..
>மண் சட்டியில் கவன் கல்லாய் உறைந்து போயிருக்கும் ஆட்டு ரத்தம்..
>நிறைந்த குமரி போல இந்த வருஷத்து முளைப்பாரி நல்ல வளர்த்தி..
>சூரியனுக்கு காட்டிக் கொடுக்கும் புத்தி உண்டு.. இருட்டுதான் பாதுகாப்பு..
ரெண்டு சாதிகளையும் மோத விட நடக்கிற சதிக்கு யாரும் எப்போதும் பலியாகக் கூடாது என்ற கருத்தோடு கதை நிறைவடைகிறது..
பிரகாஷ் செல்வராஜ்...🐅