அப்பாக்களின் தேவதைகள்..
விஷேச வீடுகளில்,,
"அம்மா பிடிக்குமா
அப்பா பிடிக்குமா.."
எனக்கேட்டு
யாரேனும்
கன்னத்தை
கிள்ளினால்,,,
அம்மாக்களின்
இடுப்பில்
அமர்ந்திருந்தாலும்..
அப்பாக்களை
கை காட்டுவார்கள்..
காய்ச்சல்
வந்து,
குணமாகிவிட்ட
விடுமுறை
நாளில்,,
பொம்மையை
பாப்பாவாக்கி..
பொம்மைக்கு
அப்பாவாக
நடந்து
கொள்வார்கள்,,
அம்மாக்கள்
வீட்டிலிருந்தாலும்,,
அப்பாக்களிடம்
முதன்முதலில்
காட்டுவதற்காக,,
கோலப்போட்டியில்
வாங்கி வந்த
சில்வர் தட்டை,,
புத்தகப்பைக்குள்
ஒளித்து
வைப்பார்கள்...
அம்மாக்களும்
தம்பிகளும்
தூங்கிவிட்ட
இரவில்...
அப்பாக்களின்
வண்டிச்சத்தம்
கேட்டதும்
ஓடிவந்து
கதவு
திறப்பார்கள்...
பொட்டானிகல் கார்டனுக்கு
சுற்றுலா சென்றுவரும்
பேருந்தில்,
அத்தனை
தோழிகளும்
விதவிதமாய்
ரோஜா நாத்தை
பற்றியபடி
அமர்ந்திருக்க,,
அவர்கள் மட்டும்
அப்பாவிற்கு
பொருத்தமான
ஸ்வெட்டரோடு
அமர்ந்திருப்பார்கள்..,
ஐந்தாறு
அழகான
ஆண்களின்,
காதல்
கடிதங்களை
புறக்கணித்திருந்தாலும்..
அப்பாக்கள்
வீட்டிற்கு
அழைத்துவரும்,
சுமாரான
மாப்பிள்ளையை
வெட்கத்தோடு
பார்ப்பார்கள்..
சமையல்
குறிப்பிற்காக
அம்மாக்களின்
அலைபேசிக்கு
அழைத்துவிட்டு,,,
அப்பாக்களது
நாளொன்றின்
சிகரெட்
எண்ணிக்கை
குறித்து,,
விசாரித்துக்கொண்டு
இருப்பார்கள்..
பிரசவ அறையில்,,
இடுப்பு வலியை
மறந்து,,
அந்த
புதிய சிசுவிற்கு
அப்பாவின்
நாசி
அப்படியே
அமைந்திருப்பதை
ரசித்துக்கொண்டு
இருப்பார்கள்,,,
அண்ணன்கள்
ஆகவேண்டிய வேலையை
பார்த்திருக்க,,
மனைவிகள்
புகைப்படத்தில்
சிரித்திருக்க,,
பிரேதமாகிவிட்ட
அப்பாக்களின்
அருகிலமர்ந்து
நிஜமாய்
அழுதுகொண்டு
இருப்பார்கள்...
அப்பாக்களின் தேவதைகள்..!
கவிதை மொழியன்,
மீள்