‘உங்கள் திருமணத்தன்று
நான் எங்கிருந்தேன் ?’
மகளின் கேள்விக்கு
விடைகூற முயன்றேன்.
“அந்தத் தீயின்
நடுச்சுடராக ஒளிர்ந்திருந்தாய்.
எம் தலைமீது தூவப்பட்ட
அட்சதையில்
ஒரு மணியாக இருந்தாய்.
சூடிய மாலை நறுமணத்தில்
இருந்ததும் நீதான்.
தாத்தா பாட்டியரின்
கண்களில்
நீர்த்துளியாக நீ திரண்டு நின்றாய்.
உன் தாயைக் கரம்பற்றிய
என் உள்ளங்கைக்குள்
வெப்பமாக இருந்ததும்
நீயே...!”
-மகுடேசுவரன்