16/02/2021

கவிதைகள்

1. "என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதைத் தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு!"
- கனிமொழி

2. "பறிக்க முடியாத
பட்டுப்பூச்சியை மறக்க
பறக்க முடியாத பூக்களை
வெடுக்கெனெக் கிள்ளி
வீசின விரல்கள்"
3. "சிலைகளை விட
மலைகளை விட
பாறைகள் அழகானவை
கூழாங்கற்களும் கூட"
- கல்யாண்ஜி

4." கல்லெறிபட்டும்
கலங்காது
தேனையே சொரிகிறது
தேன்கூடு"
- தேவதேவன்

5. "அதை அவ்வளவுதான்
புரிந்துகொள்ள முடிந்தது
நண்பர்களுக்கு
எதிரியே! உன் கைகளை
முத்தமிட அனுமதி
என் நண்பர்களைவிடவும்
அதை நீ புரிந்து கொண்டதற்கு!"
- மனுஷ்யபுத்திரன்


6. "அநேகமாய்
பார்க்க மறந்தாலும்
தலைக்கு மேல் வானம்
என் நினைவுக்குள்
நீயும்!"
- இரா. சேதுபதி

7. "கவிதைக்குள் வராத
எந்தவொன்றும் உலகில் இல்லை
உன்னை நான்
முத்தமிட்டு உயிர் பெற்ற
எனது காலத்தின்
முதற்கணத்தைத் தவிர"
-ரமேஷ் - ப்ரேம்

8. "எனக்கு யாருமில்லை
நான் கூட"
- நகுலன்

9. "எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?"
- தபூ சங்கர்

10. "விலக விலக
புள்ளி தானே?
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்?"
- இரா. பார்த்திபன்


11. "இன்னும் உடையாத
ஒரு நீர்க் குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது.
கைப்பிடியளவு கடலாய்
இதழ்விரிய உடைகிறது
மலர் மொக்கு"
-பிரமிள்

12. "கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே
தோன்றவில்லை.
அவரும் புன்னகைத்துப்
போய் விட்டார்.
ஆனாலும்
மனதிலே ஒரு நிம்மதி"
- ஆத்மாநாம்

13. "இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக் கொள்ளட்டுமே"
-அறிவுமதி


14."..... ஆயத்தங்களில்
கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்.."
-பசுவய்யா (சு.ரா)


15. "கூந்தலின்
ஒற்றை முடியென
சந்திப்பின் குறுகிய வெளியில்
என் பிரியங்களைப்
பிரித்துக் காட்ட
அவகாசமேதுமின்றியே
நிகழ்ந்தது நம் பிரிவும்..."
- சல்மா

16. "....ஒரு நிறைவேறாக் காதலில்
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த் துளிகளாய்த்
தேங்கித் தளும்புகின்றன. "

- குட்டி ரேவதி


17. "பழத்தை சாப்பிட்டு விடு
நாளைக்கென்றால் அழுகிவிடும்
என்றாள் அம்மா
வாங்கி விண்டு உண்டேன்
இன்றை"


- தேவதச்சன்

18. "அந்திக் கருக்கலில்
திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை."


- கலாப்ரியா


19. "உன் பெயர்
இந்த இரவில்
காலி அறையில்
மாட்டிய கடிகாரம்"

-சுகுமாரன்


20. "சுற்றிலும் இருட்டைவீசி
தயாராக நிற்கிறது இரவு
மனிதர்கள் சுவர்களுக்குள் ஒடுங்க
அனாதைகளாக அழும் தெருக்கள்"

- சமயவேல்