யானையை
என்றாவது
ஆழ்ந்து ஊன்றிப்
பார்த்திருக்கிறாயா ?
அது
எத்துணை அரிய
மெல்லுயிர் என்று
உணர்ந்திருக்கிறாயா ?
ஒற்றடங் கொடுக்கும்
மெத்துதுணி போன்ற
அதன் காலடி மொழுமொழுப்பு
சிறுமுள் குத்தலைக்கூடத்
தாங்காது, தெரியுமா ?
ஓர் எறும்பு
அதன் காதிற்குள் புகுந்து
உட்சந்துகளில் ஊர்ந்தால்
அதன் நிற்சமநிலை குலைந்து
வலிபொறுக்க முடியாமல்
இறந்தேவிடும் என்று
அறிவாயா ?
உயிரினங்களில்
உயர்வான கழிவுடையது
யானையே என்று
கேள்விப்பட்டதுண்டா ?
நூறு வகை
இலைதழைகளைத் தின்று
வயிற்றுள் செறிவாய்த் தொகுத்து
இடும் எச்சத்தை
நம் மக்கள் கால்குளிர மிதிப்பார்கள்,
தெரியுமா ?
அந்தச் சாணத் தேய்ப்பில்
தொடைமுதல்
காலடிவரையிலான
அனைத்துத் தொந்தரவுகளும்
நீங்குவதை நினைத்ததுண்டா ?
அவ்வளவு ஏன்,
யானை இட்ட சாணத்தில்
பட்டுப்பூச்சி மொய்ப்பதைப்
பார்த்திருக்கிறாயா ?
யானை என்பது
ஒற்றை உயிரா ?
அதன் தோற்பரப்பு
நூற்றுக்கணக்கான
நுண்ணுயிர்கள்
தொற்றி வாழ்கின்ற
தோப்பு என்பதையேனும்
அறிவாயா ?
உன்னுடைய வரலாறெங்கும்
நிகழ்ந்த
ஆயிரக்கணக்கான போர்களில்
தலைவனைத் தூக்கிச் சுமந்தபடி
களங்களில் ஓடிய
களிறு யானைதானே ?
கைவேற் செருநர்
கடிதோச்சி எறிந்த
நெய்வேல் முனைகள்
மெய்மேல் புக
பிளிறிச் செத்ததும் அதுதானே ?
போர்நடுக்களத்தில்
படுகாயமுற்று
உயிர்க்கு இறைஞ்சுவோரைப்
படைகிழித்துப்
பாய்ந்தோடித்
தன் தும்பிக்கையால் தூக்கி வந்து
மருத்துவக் கூடாரத்தில்
சேர்த்ததும் யானையடா !
நீ பழக்கிய
யானையைச் சுற்றி
வட்டமொன்று வரைந்து
“வரும்வரைக்கும்
அப்படியே நில்” என்றால்
அங்கேயே
ஆடாது அசையாது நிற்குமடா !
அவர் கொடுக்கும்
காசை வாங்காதே என்றால்
வாங்காதடா !
கரும்புத் துண்டைத் தொடாதே
என்றால் தின்னாதடா !
அன்பே உருவான பெண்போல்
அளப்பரிய நேயம் காட்டுமடா !
அதன் காடு எங்கே ?
அதன் நீர்வளம் எங்கே ?
ஒரு வாழையிலையை
முறித்துத் தின்றுவிடும்
என்றுதானே
மின்வேலியிட்டு
வைத்திருக்கிறாய் ?
காட்டின்
நீர்ச்சுனைகள் அனைத்தையும்
முன்னேற்ற மாசுபெருக்கித்
தூர்த்துவிட்ட நீ
நீர்விடாய் பொறாது
நிலமிறங்கி வந்த
யானைமீது
நெருப்பள்ளிப் போட்டாயே,
உயிரினமாடா நீ ?
உனக்குப் பயன்படாவிட்டல்
உன் பண்ணை வளர்ப்புக்குள் வராவிட்டால்
நீ அறுத்துத் தின்ன முடியாவிட்டால்
உன் எதிரே வந்து நின்றால்கூட
இவ்வுலகில்
ஓர் அஃறிணை
உயிர் வாழக் கூடாதாடா ?
மனிதனாடா நீ ...
_கவிஞர் மகுடேசுவரன்