23/02/2020

கு.விநாயகமூர்த்தி.

அறைக் கைதியாய் 
படுக்கையில் கிடக்க 
விதிக்கப்பட்ட ஒருவரின் 
டியூப்பிலிருந்து வழிந்த 
மூத்திரப் பீங்கானை கழுவி வைத்து
பீத்துணி மாற்றி 
ஈரத்துணியால் உடல் துடைத்து
மாற்றுத் துணி உடுத்தி விட்டு 
அவர் கக்க கக்க 
துடைத்து துடைத்து
கரைத்த கஞ்சி ஊட்டுபவளின்
சேலை தெரியாமல் நழுவ
வைத்த கண் வாங்காமல் 
அவள் மார் பார்க்கிற வியாதிக்காரரன்
கண்களைப் பார்க்காமல் தவிர்த்து 
சேலை நழுவியது தெரியாதது போல் 
நடித்து 
முழுதாக ஊட்டி முடித்து 
இலேசாய் சிரித்து விட்டு 
கதவோரம் வந்து 
ஒதுங்கி நின்று 
சேலையை சரிசெய்து திரும்புகிறாள்.
சொல்லுங்கள் 
இவளை எப்படி 
காதலிக்காமல் இருப்பது?

நூலாம்படை.
கு.விநாயகமூர்த்தி.