26/03/2019

முனைவர் குமரவேல்

பக்குவபடு.
இந்த உலகை ஞானம் கொண்டு பார். அறிவை தேடு அது தரும் நல்லதொரு பாதை.
நிறைய படி விளங்காது என்றாலும் திரும்ப திரும்ப படி உள்வாங்கு.

ஆம் எனக்கும் சட்டென்று எதுவும்  விளங்கிவிடாது.
ஆம் என் பெரியதந்தையார் உன் பாட்டன்
களத்துமேட்டில் நெற்குவியலை கிளிகள் கொத்தி தின்றதை பார்த்து விரட்டியபோது சொன்னார் அதற்கும் சேர்த்துதான் வெள்ளாமை.

உண்மையில் அப்போது புரியவில்லை மகளே ஆனால் காலம் உணர்த்தியது. சம்பாதிக்க தொடங்கியபோது.
வழியில் யாசகம் கேட்கிறவருக்கு பத்து ரூபாய் போடுகிறோமே யாருக்கு உதவியென்று வந்தால் பலனின்றி உதவுகிறோமே சொந்தபந்தங்களுக்கு அள்ளி தருகிறோமே.
அதற்கு சேர்த்துதான் நம்மிடம் தரப்பட்டிருக்கிறதென்று புரிந்தது. அதற்கும் சேர்த்துதான் வெள்ளாமையென்றதன் பொருள் அப்போதுதான் உணர்ந்தேன் நம்மிடம் தரப்பட்டிருப்பதில் வறியவருக்கும் சேர்த்துதான் என்பதை.

ஆம் மகளே முதியோர் சொல் கேள் ஆரம்பத்தில் எரிச்சல் தரும் பிறகு காலம் நமக்கு புரியவைக்கும்.
வாசலில் நிற்கிறவரை விரட்டாதே முடிந்ததை தந்தனுப்பு.
தாயை நேசி அவள் உன்னை என்னிலும் அதிகமாய் நேசிக்கிறாள்.
ஆனால் வெளிகாட்டாமல் உன்னை சீர்படுத்துகிறாள்.
எதையும் கேட்டு பெறு எதுவானாலும் திறந்த மனதோடு அவளோடு பேசு நீ பேசுவதை அவள் அறிவாள்.
உன் வயதை கடந்துதான் அவள் வந்திருக்கிறாள்.
நம்மை நம்மிலும் அதிகமாய் நேசிக்கிறவள்.
தாய் எல்லாவற்றிக்கும் மேல் அது உனக்கு போகபோக புரியும்..

மகளே ..
மண்ணை நேசி.
மனிதம் படி.
மகிழ்ந்து வாழ்.
நிறைய படி.
எதையும்
ஆய்ந்து அறி.
இரண்டுதான் உண்டு உலகில்
சரி ,தவறு.
உண்மை ,பொய்.
நல்லது ,கெட்டது
நீ நம்புகிற  விடயம் மற்றவர் பார்வையில்
சரியல்லாததாக இருக்கலாம் ஆனாலும்
சரி என்பதை மட்டுமே செய்.
காலம் மிக சிறந்த ஆசான் நல்லது கெட்டதை போதிக்கும்,உணர்த்தும்.
நீதி தவறாது நட.
நன்மையை விரும்பு முடிந்தவரை
நல்லதை நாடு
நல்லதையே செய் .
அனைவரிடம் அன்புகொள்.‍
அதைவிட பேராயுதம் வேறேதுமில்லை.

முனைவர் ம.குமரவேல்