இரவில் வந்தது மழை.
யாரும் அதன் அழைப்பை
ஏற்கவில்லை.
சன்னல்களும் கதவுகளும் சாத்திக்கிடந்தன.
துக்கம் அதிகமாகி மாரடித்துப் புலம்பியது அது.
இருட்டின் ஒரு துளியைக்கூட
கரைக்கமுடியவில்லை அதனால்.
இரவெல்லாம் சபித்தபடியும்
முணுமுணுத்தபடியும் இருந்தது.
காலையில் வாசலில்
தேங்கியிருந்த மழையின் கண்ணீரில் நின்றபோது
முறுக்கிகொண்ட சிறுமிபோல்
கால்களைக் கிள்ளியது
அதன் குளிர்ந்த கோபம்.
-அழகிய பெரியவன்